வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியலும், அரசியலும்!

மரபணு மாற்று கத்தரிக்காய், நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயையும், அதைத் தொடர்ந்து அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் சந்தையில் அறிமுகப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படு்த்துவதற்கு தொழில்நு்ட்ப நிபுணர்களில் ஒரு தரப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் விரிவான விவாதங்கள் நடத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.


மரபணு என்றால் என்ன?

ஒரு உயிர் அதன் தன்மைகளை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (DNA) என்று சொல்கிறோம். இந்த மரபணுதான் தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும், குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது.

இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனம் இன்னும் கண்டறியவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.


மரபணு மாற்றம் (Genetic Engineering –or- Genetic Modification) என்றால் என்ன? அது எதற்காக?

மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி என்று ஒரு வகையை கேள்விப் பட்டிருக்கலாம். நல்ல ருசியுள்ள மா வகையையும், நல்ல விளைச்சல் தரக்கூடிய மா வகையையும் இணைக்கும் விதத்தை உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம். இரு மரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து இந்த புதிய ரகங்களை உருவாக்கிவிடுவார்கள். இரண்டு நல்ல குணங்களையும் இணைத்து கிடைக்கும் பழத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள் இன்றி இயற்கையிலேயே பல வீரிய ரக உயிரினங்கள் தோன்றியுள்ளன.

"The decision is a big blunder and the GEAC has taken this decision despite many dissent notes from various experts and senior scientists," said Supreme Court appointed observer in GEAC scientist Dr Pushp Bhargava.


இதை புரிந்து கொள்ள உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்து விளக்கிய அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கொள்கையை படித்தால் முழுமையாக புரியும்.

ஆரோக்கியமான உயிரினங்களை உற்பத்தி செய்வதற்காகவே இயற்கையும், மனிதர்களும் இது போன்ற உத்திகளை கையாண்டுள்ளனர்.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்க்கின்றனர்?

அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அதை பயன்படுத்துவதில் சில அம்சங்களை கவனிக்கவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அறிவியலை வழிபடும் சில மேதைகள் அதன் எதிர்விளைவுகள் மற்றும் தீயவிளைவுகள் குறித்து சிந்திக்க மறந்து விடுவதாக – அல்லது – மறுத்துவிடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. அறிவியலும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்று அறிவியல் மேதைகளிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அறத்தை மறந்து பல அறிவியல் மேதைகள் செயல்படுவதால் மனித இனத்திற்கு பேரழிவுகள் ஏற்படுவதாகவும் இந்த தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்கையிலும், இயற்கையை சீரழிக்காத மனித முயற்சிகளிலும் மரபணு மாற்றம் ஏற்படுவதில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் இயற்கைக்கு சவால் விடும் வகையில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கை ஏற்பதில்லை. அதற்கு உரிய எதிர்விளைவுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மனித முயற்சியில் குதிரையையும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது. அதன் பெயர்: கோவேறுக் கழுதை. இந்த விலங்கு கழுதையைப்போல் பொதியும் சுமக்கும், குதிரையைப்போல் வேகமாகவும் செல்லும். ஆனால் இந்த புதிய விலங்கு மற்ற விலங்குளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. கோவேறுக்கழுதை தேவைப்படும் போதெல்லாம் குதிரையையும், கழுதையையும் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த விலங்கால் மனிதனுக்கு தீமை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் இந்த விலங்கை மனிதன் இன்னும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு நலக்கேடுகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மரபணு மாற்றுக்கூறுகள் மற்ற உயிர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு ஆய்வு(BIO-SAFETY TEST)களை மேற்கொள்ளாமல் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தக்கூடாது என்று மரபணுமாற்றுத் தொழில்நுட்பவியல் நிபுணர்களிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர்

மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் எந்தெந்த உயிரிகளில் பயன்படுத்தப்படுகிறது?

விலங்குகளில் மாடு, ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றில் மரபணுமாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே முட்டையிடாத (பிராய்லர்) கோழிகள், முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கும் திறனற்ற முட்டைகளை ஈனும் (லேயர்) கோழிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோழிகளையும், முட்டைகளையும் உட்கொள்வோருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தாவரங்களில் அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு ரகங்களில் மட்டுமல்லாமல் மரவகைகளிலும், மூலிகை இனங்களிலும்கூட மரபணு மாற்று ஆய்வுகள் நடைபெறுகின்றன ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகள் உரிய அளவில் நடைபெறவில்லை.


மரபணு மாற்று கத்தரிக்காயில் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடந்தனவா?

மரபணு மாற்று கத்தரிக்காயை உருவாக்க இருக்கும் மான் சான்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜென்ட்டான மஹிகோ (Maharashtra Hybrid Company) நிறுவனமே இந்த உயிரிப்பாதுகாப்பு சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை அறிக்கையை பிரான்ஸ் நாட்டின் உயிரித்தொழில்நுட்ப நிபுணரான பேராசிரியர் செராலினி என்பவரிடம் கருத்து கேட்டு கிரீன்பீஸ் அமைப்பு அனுப்பியது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பேராசிரியர் செராலினி, ஒரு பொறுப்பற்ற - மோசமான ஆய்வின் .உதாரணமாக மஹிகோ நிறுவனம் நடத்திய சோதனையை வகைப்படுத்தினார். இது குறித்து விரிவான விமர்சன அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

பேராசிரியர் செராலினி வெளியிட்ட விமர்சன அறிககை மத்திய அரசால் அமைக்கப்பட்ட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு(GEAC)விடம் அளிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர் செராலினியை தொடர்பு கொண்டு சில ஐயங்களை எழுப்பியுள்ளனர். பேராசிரியர் செராலினியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் மஹிகோ நிறுவனம் நடத்திய உயிர்ப்பாதுகாப்பு சோதனை அறிக்கையின் எந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளது என்று கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர். ஆக மொத்தத்தில் மஹிகோ நிறுவனம் நடத்தியதாகக் கூறும் பாதுகாப்பு சோதனையின் அறிக்கையைக்கூட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழுவின் உறுப்பினர்கள் முழுமையாக படிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதை பேராசிரியர் செராலினியே அவரது இந்திய வருகையின்போது தெரிவித்தார். இந்திய அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சல் தம்மிடம் இருப்பதாகவு்ம் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள்தான், அதை மஹிகோ நிறுவன பாதுகாப்பு சோதனை அறிக்கையை ஏற்றுக்கொண்டு மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை சந்தையில் உணவாக அறிமுகப்படுத்துவதால் இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சான்று அளித்துள்ளனர்.



சரி அது என்ன Bt கத்தரிக்காய்?

Bacillus thuringiensis என்ற பாக்டீரியாவை கத்தரியின் மரபணுவில் புகுத்தி தயாரிக்கப்படுவதால் அந்த பாக்டீரியாவின் முதல் எழுத்துகளையும் இனிஷியலாக போட்டு Bt கத்தரிக்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாவால் பயிர்களை தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உண்ட உயிரினங்கள் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது.



மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் அறிவியலா? அரசியலா?

மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் இயற்கையாக நடந்தவரை அறிவியலாக மட்டுமே இருந்தது. ஆனால் இந்த அறிவியல் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சிக்கியபோது அறிவியலில் அரசியல் கலந்தது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் முறையற்ற செல்வாக்கை செலுத்த ஆரம்பித்தபோது அறிவியல் முழுமையாக மறைந்து அரசியல் மட்டுமே மிஞ்சியது. இது ஆதிக்க எண்ணம் கொண்ட ஏகாதிபத்திய அரசியல்!

மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்?

விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் களவுபோகும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு கப்பம் செலுத்தாத விவசாயிகள் விதைத்திருடர்களாக சித்தரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படுவார்கள். இந்தியர்கள் எதைச் சாப்பிடுவது என்பதை பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும். அதை சாப்பிட்டு நோய்வந்தால் அதற்கான மருந்துகளையும், அதை பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்வதாகக்கூறி இந்திய்ர்களின் ரத்தத்தை உறிஞ்சும்.

பன்னாட்டு நிறுவனங்களும், அரசும் சேர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக சாமானிய மக்களான நாம் என்ன செய்ய முடியும்?

நாம்தான் இந்த அரசை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம். இந்த பிரசினை குறித்து பரவலான விவாதங்களை ஏற்படுத்துவன்மூலம் ஆட்சியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தலாம். இதன் மூலம் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத கொள்கைகள் அனைத்தையும் மாற்றி அமைக்கலாம். அதற்கு நமக்குத் தேவை விழிப்புணர்வும், செயல்பாடுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக