சனி, 10 ஏப்ரல், 2010

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்

 பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.
'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது பாரம்பரிய அறிவியல் முறைகள் பற்றிய விழிப்புணர்வோ கவனமோ இன்று அதிகம் காணப்படுவதில்லை. பஞ்சகவ்யம், குணபசலம், டாக்டர் ரிச்சாரியா (பசுமைப் புரட்சிக்கு முன்பு மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர்) சேகரித்த பல்லாயிரக்கணக்கான நெல் ரகங்கள் ஆகியவை இன்று விவசாயப் பல்கலைக்கழகங்களில் ஆராயப்பட்டுவருகின்றன. இவை தவிர, நாட்டின் ஒவ்வொரு பகுதியின் நிலைகளுக்கேற்ப விவசாயக் கருவிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவையெல்லாம் நம் பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுக்குச் சான்றாக விளங்குவதை ஏற்கனவே பார்த்தோம். நமது இந்தப் பாரம்பரிய அறிவியல், முக்கியமாக விவசாயத்தைப் பொறுத்தவரையில், நவீன அறிவியலிலிருந்து அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இதை அறிந்துகொண்டால் மேலும் பல விஷயங்களை எளிதில் புரிந்துகொள்ளலாம். பசுமைப் புரட்சி பற்றிய சில கேள்விகளுக்குத் தானாகவே விடைகள் கிடைத்துவிடும்.
இயற்கையின் விவசாயம்
யாருமே விதைகள் விதைக்காமல், எரு சேர்க்காமல், பூச்சிக்கொல்லி விஷங்கள் தெளிக்காமல், நீர் பாய்ச்சாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வாழ்ந்து, மண் வளத்தைக் குறைக்காமல் தழைத்து நிற்கின்றன காடுகள். நம் முன்னோர்கள் இந்தக் காடுகளிடம் பாடம் பயின்றவர்கள். அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரையில் உயர்ந்த வேளாண் அறிவியல் அறிவை வளர்த்துக்கொண்டு, அதன் அடிப்படையில் நிலைத்து நிற்கும் வேளாண்மையை வளர்த்தெடுத்துவந்தனர். இவற்றை விருட்சாயுர்வேதம் போன்ற நூல்களில் எழுதியும்வைத்தனர். இப்படிப்பட்ட அறிவுபெற்ற பாரம்பரிய விவசாயிகளைத் தன் பேராசிரியர்களாக ஏற்றுக்கொண்டு பாடங்கள் பயின்றவர், ஆல்பர்ட் ஹோவார்ட் என்ற ஆங்கிலேய வேளாண் விஞ்ஞானி.

பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் பயின்று, இங்கிலாந்திலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஆராய்ச்சிப் பணிகளில் இருந்துவிட்டு, நம் நாட்டு விவசாயிகளுக்கு நவீன வேளாண் அறிவியலைப் புகட்டுவதற்காக 1905இல் இந்தியாவில் வந்திறங்கினார் ஹோவார்ட். ஆனால், அவருடைய உண்மையான, அகங்காரமற்ற தேடல், அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. தன்னுடைய நவீன வேளாண் அறிவியல் பயிற்சியிலிருந்து விலகி, இந்திய விவசாயிகளிடமிருந்து வேளாண்மையைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் முடிவுசெய்தார்.

வனங்களையும் நமது பாரம்பரிய வேளாண் முறைகளையும் கூர்ந்து கவனித்துத் தான் கற்றதை 'இயற்கையின் விவசாயம்' என்றழைத்தார்; இந்தத் தலைமுறையினர் அதைப் புரிந்துகொள்ளும் வகையில் "An Agricultural Testament" 1 எனும் புத்தகமாக எழுதினார். இவர் காடுகளில் கவனித்த நான்கு முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகள்:

1. பலவகையான தாவரங்கள் ஒன்றாக வளர்கின்றன.
காடுகள் அதிகபட்சப் பல்லுயிர்த் தன்மை அல்லது உயிரினப் பன்மை (Bio-diversity) கொண்டவை. ஒவ்வொரு வகைத் தாவரமும் ஒருவகை ஊட்டச்சத்தை மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு, மண்ணுக்குத் திரும்பத் தருகிறது என்பதால், மண்வளம் குறையாமல் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு வகையையும் வெவ்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்கும் என்பதால், பலவகையான தாவரங்கள் கலந்திருப்பதால், அவை எளிதில் பரவமாட்டா. இப்படி, உயிரினப் பன்மைகொண்ட உயிர்ச்சூழல் அமைப்பு, சரிவிலிருந்து மீண்டெழும் தன்மையை அதிகமாகக் கொண்டிருக்கும்.

2. சூரியன், காற்று மற்றும் மழை ஆகிய மூன்றின் நேரடித் தாக்கத்திலிருந்து மண் எப்போதுமே பாதுகாக்கப்படுகின்றது. மண் எப்போதுமே உதிர்ந்த இலைதழைகளைக்கொண்டு மூடப்பட்டிருக்கும். இதனால், மண்ணில் இருக்கும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகின்றது. மண் சூடாகாமல், அதில் உயிர்வாழும் நுண்ணுயிர்களுக்கேற்றபடி குளிர்ந்திருக்கும். மண்ணில் உள்ள கனிப்பொருள்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறாமலும் வளமான மேல்மண் அரித்துப்போகாமலும் உதிரியாக இருக்கும் மண் கெட்டியாகாமலும் பாதுகாக்கப்படும்.

3. காட்டு மரங்கள், தங்கள் கழிவுகளைக் கொண்டே தங்களுக்குத் தேவையான உரத்தைத் தயாரித்துக் கொள்கின்றன. காட்டின் உயிர்ச்சூழல் (ecosystem) அமைப்பினுள் இருக்கும் சக்தியும் கனிப்பொருட்களும் இடைவிடாத சுழற்சி முறையில் இயங்கியபடி இருக்கும். இலை உதிர்ந்து, மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களுக்கு உணவாக மாறி, சிதைந்து, ஊட்டச்சத்துகளாக மரங்களைச் சென்றடைந்து, புதிய இலைகளாக மாறுகின்றன. இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வெளியிலிருந்து சூரிய சக்தியை மட்டுமே எடுத்துக் கொண்டு, தமக்குத் தேவையான உணவை யாருடைய உதவியும் இல்லாமல், தாமாகவே தயாரித்துக் கொண்டுள்ளன.
4. தாவரங்களும் விலங்கினங்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கின்றன.
அந்தந்தச் சூழலுக்குத் தகுந்த தாவர வகைகள் வளர்ந்து, அதிகபட்ச மற்றும் நீடித்த வகையில் (bio-mass) தழைப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பில் வளரும் தாவர வகைகளை உண்ணும் சைவப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் அசைவப் பூச்சிகளும் கூடவே இருக்கும். பூச்சிகளை உட்கொள்ளும் தவளை இனங்களும் மீண்டும் அவற்றைத் தின்னும் பாம்புகளும் பாம்பை உண்ணும் பறவையும் இறந்த பறவையின் இறைச்சியைச் சிதைத்து ஊட்டச்சத்தாக மாற்றும் நுண்ணியிர்களும் அங்கு வசிக்கும் எல்லா உயிரினங்களையும் உயிர்ச் சூழலையும் சமநிலையில் வைத்துக்கொள்ளும் (பாடப் புத்தகத்தில் நாம் படித்திருக்கும் உணவுச் சங்கிலிதான் இது).
இந்த நான்கு கோட்பாடுகளையும் அடிப்படையாகக்கொண்டு, நம் விவசாயிகள் கீழ்க்காணும் முறைகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள்.

அ) ஒரே தோட்டத்தில் பலவகையான பயிர்களைச் சேர்த்தே பயிரிட்டனர். பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றினர்.

ஆ) மண்ணின் மேல் மூடாக்குப் போட்டு, மண்ணைப் பாதுகாத்து விவசாயம் செய்தனர்.

இ) கால்நடைகளைக் காட்டில் மேயவிட்டு, விவசாயக் கழிவுகளை உணவாகக் கொடுத்து, மாட்டுச் சாணத்தை மண்ணில் சேர்த்து, ஊட்டச்சத்துகளை ஓயாமல் சுழற்சிசெய்து வந்தனர். 'அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு' எனும் பழமொழி இதற்கு ஆதாரம்.

ஈ) ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற பயிர்வகைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயிரிட்டனர்.

இந்த நான்கு முக்கியமான கோட்பாடுகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தால், நமக்கு ஓர் உயிர்ச்சூழல் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். பாரம்பரிய அறிவியல் ஓர் அமைப்பை முழுமையாகப் (லீஷீறீவீstவீநீ ) பார்க்கிறது. ஓர் உயிர்ச்சூழல் அமைப்பை எடுத்துக்கொண்டால், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பார்க்காமல், அது முழுமையில் அங்கம் வகிக்கும் அமைப்பின் அடிப்படையிலேயே பார்க்கிறது. உதாரணத்திற்கு, ஒரு தாவர வகையின் செயல்முறை, அது இருக்கும் தோட்ட அமைப்பைச் சார்ந்தது. தோட்ட அமைப்பு, அந்தக் கிராமத்தின் அமைப்பைச் சார்ந்தது. அதாவது, அந்தப் பகுதியின் மண் வகை, தட்பவெப்ப நிலை, அங்கு வாழும் உயிரினங்கள், மழை அளவு, நிலத்தடி நீரின் தன்மை ஆகியவற்றைச் சார்ந்தது. பிறகு அந்தப் பகுதி அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள்கூட, அந்தத் தோட்டத்தில் நடைபெறும் விவசாயத்தைப் பாதிக்கும். இப்படி எல்லா அம்சங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன.

உயிர்ச்சூழல் அமைப்பு ஆரோக்கியமாக இருந்தால், அதன் அங்கங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அதன் அங்கங்கள் ஏதேனும் ஒன்றில் பிரச்சினை தென்பட்டாலும் அதை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கிய மின்மைக்கும் இயற்கையின் கோட்பாடு(கள்) ஏதேனும் மீறப்பட்டிருபதற்கும் அறிகுறியாகப் பார்ப்பது பாரம்பரிய அறிவியல். பிறகு, அந்தப் பிரச்சினையின் அடிப்படையை ஆராய்ந்து, அந்த அமைப்பின் சமநிலையை மீட்க அது வழிவகைகளைக் கண்டறியும்.

1913இல் ஜப்பானில் பிறந்த மசானோபு ஃபுகுவோகா என்பவர், நவீன வேளாண் அறிவியலில் அவர் காலத்தில் புதிதாக அறிமுகமாகியிருந்த நுண்ணுயிர் வேதியியலில் தேர்ச்சிபெற்று, விவசாயச் சுங்க ஆய்வாளராகப் (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ நீustஷீனீs வீஸீsஜீமீநீtஷீக்ஷீ) பணியாற்றினார். இருபத்தைந்து வயதாகும்போதே, நவீன அறிவியலின் அடிப்படை குறித்த ஐயங்கள் அவர் மனத்தில் எழுந்தன. சிக்கலான உயிர் வலையை நாம் புரிந்துகொண்டு, அதற்கான தரப்படுத் தப்பட்ட உலகளாவிய செயல்முறைகளை வடிவமைக்க முடியும் என்று எண்ணுவது அகங்காரம் கொண்ட, முட்டாள்தனமான எண்ணம் என்று ஃபுகுவோகா முடிவுசெய்தார். அவர் தன் வேலையை விட்டுவிட்டு, இயற்கையிடம் சரணடைந்தார். இருபதாண்டுகள் தன் பண்ணையில் இயற்கை விவசாயக் கோட்பாடுகளைப் பின்பற்றி, உலகே பார்த்து அசந்துபோகிற அளவுக்கு உற்பத்தியைக் கொடுக்கும் ஓர் உயிர்ச்சூழல் பண்ணையை வெற்றிகரமாக உருவாக்கித் தான் கூறியதை நிரூபித்துக்காட்டினார்.

2. நவீன வேளாண் அறிவியலின் ஆரம்பம் உயிர்ச்சூழல் அமைப்பை ழுமையாக அணுகும் பாரம்பரிய அறிவியலுக்கு முரணாக, ஓர் அமைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் இயங்கு முறையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, பிரச்சினை தென்பட்டால், அதைத் தனியாகத் தீர்ப்பதுதான் நவீன அறிவியலின் அணுகுமுறை. இதைப் பகுதிகள் சார்ந்த எளிய, அல்லது பிளவுண்ட அணுகுமுறை  எனலாம். நவீன வேளாண் அறிவியலின் வித்து, 19ஆம் நூற்றாண்டில் நவீன இரசாயனவியலில்தான் முதலில் முளைத்தது. 1800இல் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, பருப்பொருள் குறித்த அணுக்கொள்கை  என்னும் விளக்கத்தின் எளிமை எல்லா விஞ்ஞானிகளையும் கவர்ந்தது. இனி, எல்லாப் பொருள்களையும் அணுவைக் கொண்டே விளக்கிவிடலாம் என்று கொண்டாடினர். 1813இல் ஹம்ஃப்ரே டேவி எனும் விஞ்ஞானி, மண்ணின் வளத்தை வேதியியல் சோதனையின் மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்றார்.
1840இல் ஜஸ்டஸ் வான் லீபிக் எனும் விஞ்ஞானி, தாவரங்கள் தமக்குத் தேவையான கனிப்பொருள்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கின்றன என்கிற 'தாவர ஊட்டச்சத்துக் கோட்பாட்'டினை விளக்கினார். ஒரு செடியை எரித்து, அதன் சாம்பலைப் பரிசோதித்தார். நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) ஆகிய மூன்று முக்கியமான சத்துகள் போதிய அளவில் மண்ணில் இருந்துவிட்டால், செடிகள் நன்றாக வளர்ந்துவிடும் என்று முடிவுசெய்தார். இதைத்தான் 'NPK உரம்' என்கின்றனர். லீபிக்கைப் பொறுத்தவரையில், மண்ணின் மேல் இருக்கும் மக்கிய தழைப்பொருள், தாவர வளர்ச்சிக்கு உதவாத ஒன்று. சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாவர வளர்ச்சிக்குத் தேவையான மற்ற கனிமங்களையும் கண்டுபிடித்துக் காட்டியது நவீன விஞ்ஞானம். ". . . நீரையும் கனிப்பொருள்களையும் கொண்ட கல் துகள்கள் அடங்கிய சேமிப்புத் தொட்டிகளாகவே மண் பார்க்கப்படும். இதனை விவசாயிகள் உழுது கிளறிவிடுவார்கள்" என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர். அன்றிலி ருந்து இன்றுவரை, இந்த 'சேமிப்புத் தொட்டி மாதிரி'தான், நவீன வேளாண் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் அடிப்படையாக இருந்துவருகிறது.

3. மண் என்பது என்ன?
லீபிக்கின் கோட்பாட்டைச் சோதித்துப் பார்க்க ஓர் உதாரணம்: உத்தரப் பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடர்த்தியான காடுகள் இருந்து வந்திருக்கின்றன. உலகிலேயே மிகவும் அதிக உற்பத்தி ஆற்றலுள்ள உயிர்ச்சூழல் அமைப்பு வெப்ப மண்டலக் காடுகள் என்பது அறிவியல் உண்மை. ஆனால், இந்தக் காடுகள் வளர்ந்து நிற்கும் ணீறீறீuஸ்வீணீறீ மண் வகையில் ஃபாஸ்பரஸ் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக, நவீன அறிவியல் ஆராய்ச்சி கூறுகின்றது. அந்த மண்ணுக்கு ஊட்டச் சத்துகளைப் பிடித்துவைத்துக்கொள்ளும் திறன்கூட இல்லாமல், மிக மோசமான தரத்தில் உள்ளது என்பதென்னவோ உண்மைதான். ஆனால், உயிருள்ள தாவரத் திசுக்களும் மண்ணில் விழுந்து மக்கிக்கொண்டிருக்கும் காய்ந்த இலை தழைகளும் ஒரு ஹெக்டேருக்கு 600 கிலோ ஃபாஸ்பரஸ் சத்துக் கொண்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மரங்கள் ஆயிரக்கணக்கான சிறு வேர்களை மேற்பகுதியிலேயே ஒரு பாயைப் போலப் படரவிட்டு, இந்தக் கழிவுகளிலிருந்தே நேரடியாகச் சத்துகளை எடுத்துக்கொள்கின்றன. அதாவது, இந்தத் தாவரங்கள் சூழலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் சூழலுக்கு ஏற்ற தாவர வகைகள் உருவாகி வளர்ந்துவருகின்றன.

4. தாவரங்களுக்குத் தேவையான கனிமங்கள் பலவும் மண்ணிலிருந்து கிடைப்பது உண்மைதான். ஆனால், அவை எவ்வாறு கிடைக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் ஆகிய மூன்று கனிமங்களும் ஒளிச்சேர்க்கையின் மூலம் செடிகளுக்குக் கிடைக்கின்றன. காற்று மண்டலத்தில் ஏராளமாக இருக்கும் (75%) நைட்ரஜன் வாயுவைத் தாவரங்கள் உட்கொள்ளும் வடிவத்துக்கு நுண்ணுயிர்கள் மாற்றிக்கொடுக்கின்றன. பொட்டாசியம் மற்றும் குளோரினைத் தாவரங்கள் மண் கரைசலிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு, இறந்ததும் திரும்பத் தந்துவிடுகின்றனவாம். ஏனைய சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், இரும்புச் சத்து, சிங்க் போன்றவை நுண்ணுயிர் களின் உதவியால், தாய்ப் பாறைகளில் ஏற்படும் ஒருவித இரசாயன மாற்றத்தின் பலனால் வெளியாகின்றன. இந்தப் புரிதலின் அடிப்படையில் பார்த்தால், மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் அதி முக்கியமான பங்கை நுண்ணுயிர்கள்தான் வகிக்கின்றன. ஒரு கிராம் மண்ணில் 100 கோடி நுண்ணுயிர்கள்வரை இருக்கின்றனவாம். அப்படியென்றால், உயிருள்ள மண், சத்தமில்லாமல் இயங்கிவரும் ஒரு பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அதனை இயக்கி வரும் நுண்ணுயிர்த் தொழிலாளர்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்துவந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

5. பாரம்பரிய இந்திய விவசாயிக்கு இருந்த மண்ணைப் பற்றிய அறிவை, ஏ.ஓ. ஹ்யூம் தனது நூலில் கூறுவதை இங்கே காண்போம். "பூர்வீக விவசாயிகள், மண் வகைகளுக்கு வைத்திருக்கும் ஏராளமான பெயர்களைவிட அதிகச் சிக்கலானது வேறெதுவும் இருக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டமும் வேறெங்கும் அறியாத, தனக்கே உரிய ஒரு டசன் பெயர்களையாவது கூறி மகிழ்கிறது. இதில் அவர்களுக்கு எந்தக் குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. சிறந்த ஐரோப்பிய விவசாயிகளுக்கு இணையாக, மண் வகைகளின் நுணுக்கமான வித்தியாசங்களைப் பற்றிய கூர்மையான அறிவு படைத்தவர்களாக உள்ளனர். மண் வகைகளின் பிரத்யேகமான பெயர்கள் ஒருபுறம் இருக்க, அவர்கள் தங்கள் நிலங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெயர்களை உபயோகிக்கின்றனர். அவை, சமீபத்தில் பயிர்செய்த காலம், எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை பயிர்செய்திருக்கிறார்கள் என்கிற விவரம், மக்கள் வசிக்கும் இடங்களுக்கு எவ்வளவு அருகில் உள்ளது எனும் விவரம், பழங்காலத்தில் உருவான மண்ணா அல்லது சமீபகாலத்தில் உருவான வண்டல் மண்ணா எனும் தகவல், மேய்ச்சல் நிலம், வயல்நிலம், அல்லது தோட்டமாக உள்ளதா போன்ற அத்தனை வெளிப்புற நிலைகளையும் விளக்குவதாக உள்ளன. மண்ணின் இயல்பைவிட இந்த வெளிப்புற நிலைகள்தான் விவசாய நிலத்தின் மதிப்பீட்டுக்கு உதவும்."6
பிரச்சினையைத் தீர்க்கும் அணுகுமுறையிலும் வேறுபாடு
லீபிக்குக்குப் பிறகு வந்த விஞ்ஞானிகள், தாவர வளர்ச்சிக்குத் தேவையான பற்பல அம்சங்களைக் கவனித்துவந்தனர். ஒவ்வொன்றாகத் தென்பட்ட மண்ணின் பௌதிகம், அதில் வாழும் நுண்ணுயிர்கள், ஆகியவற்றைத் தனித்தனியாக ஆராய்வதற்காக, மண் இயற்பியல், மண் நுண்ணியிரியியல் போன்ற தனித்தனித் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இயற்கை நிகழ்வுகளை இப்படிப் பகுத்துப் புரிந்துகொள்ள முடியுமா? ஒரு நெல் வயலில் இருக்கும் பல முக்கியமான குணாம் சங்களை மட்டும் பட்டியலிட்டு, ஃபுகுவோகா வரைந்த வரைபடத்தைப் பாருங்கள். காண்க படம்7.
இவற்றைத் தவிர, அந்த வயல் அமைந்திருக்கும் கண்டத்தில் மற்றும் நம் உலக அளவில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் போன்றவைகூட, அந்த வயலின் நெல் விளைச்சலைப் பாதிக்கும். மேலும், இந்த ஒவ்வொரு குணாம்சமும் ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கும். இவற்றை எப்படித் தனித்தனியாகப் புரிந்துகொள்ள முடியும்?

விவசாய நிலத்தில் பிரச்சினை தென்பட்டால், நவீன மற்றும் பாரம்பரிய அறிவியலின் அணுகுமுறை எவ்வாறு வேறுபடும்? இதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
1. ஒரு தோட்டத்தில் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகள் அதிகமாகிவிட்டால், அதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதி, பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு அவற்றை நேரடியாகத் தாக்கிக் கொல்லும் வழியை நவீன அறிவியல் கடைபிடிக்கிறது. இந்தப் பூச்சிக்கொல்லிகளால் மண்புழுக்கள் மற்றும் சிலந்தி போன்ற நன்மைசெய்யும் பூச்சிகளும் கூடவே அழிந்துவிடுகின்றன. மேலும், பின்வரும் தலைமுறைகளைச் சேர்ந்த சைவப் பூச்சிகள் விஷத்துக்கான எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டு சாக மறுக்கின்றன.
பாரம்பரிய அறிவியல், பூச்சிப் பிரச்சினையை அந்த உயிர்ச்சூழல் அமைப்பின் ஆரோக்கியமின்மையின் அறிகுறியாகப் பார்க்கும். உதாரணத்திற்கு, அந்தச் சூழலுக்குத் தகாத பயிர்கள் அங்கே பலவந்தமாகப் புகுத்தப்பட்டிருந்தாலோ ஓரினப் பயிர்முறை பின் பற்றப்பட்டிருந்தாலோ அல்லது மண்ணும் தாவரங்களும் வலுவிழந்திருந்து பூச்சி எதிர்ப்புச் சக்தி குறைந்திருந்தாலோ இத்தகைய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று பாரம்பரிய வேளாண் அறிவியல் கணிக்கிறது. இவற்றை அடிப்படையில் சரிசெய்யத் தேவையானவற்றை அது மேற்கொள்ளும்.
2. ஒரு மண் சத்திழந்து, தாவரங்கள் பசுமையாக வளராவிட்டால் நவீன அறிவியல், நைட்ரஜன் சத்தை மண்ணுக்கு ஊட்ட, யூரியாவை மண்ணில் சேர்க்கச் சொல்லும். இந்த உப்பின் சேர்க்கையால், மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் அழிந்து, இயற்கையாகக் கிடைத்துக்கொண்டிருந்த ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போய், மண் மலட்டுத்தன்மை அடைகிறது. மேலும், இதனால் செடியின் தண்டு உப்பிக்கொண்டு, தண்டு துளைப்பான் (stem borer) போன்ற பூச்சிகளைக் கவர்கின்றன. பாரம்பரிய அறிவியல், வளமிழந்த மண்ணைச் சரிசெய்ய, கிடைக்கும் தழைப்பொருள்களைக் கொண்டு மண்ணை மூடிவைத்து, ஈரப்பதத்தைப் பாதுகாத்து நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கான சூழலை அமைத்துக்கொடுத்து, வளப்படுத்தும் பொறுப்பை அந்த நுண்ணுயிர்களின் கைகளில் ஒப்படைக்கும். இயற்கையின் மர்மம் இயற்கையை ஓர் ஆய்வுக்கூடத்தில் அடைத்து, அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஃபுகுவோகா மட்டுமல்ல, வான் லீபிக்கூடத் தன் இறுதிக் காலத்தில் தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார்: "நம்மை உருவாக்கிய படைப்பாளியின் பேரறிவுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன். அதற்கான தண்டனையையும் பெற்றுவிட்டேன். அவனுடைய வேலைப்பாட்டை மேம்படுத்த விரும்பினேன். இந்தப் பூமியையும் அதிலுள்ள உயிர்களையும் பிணைத்து இந்தப் பூமியை எப்போதும் புத்துயிருடன் விளங்கச்செய்யும் இயற்கை நியதிகளின் அற்புதமான சங்கிலியில் எதோ ஒரு வளையம் விட்டுப் போய்விட்டது என்று என்னுடைய குருட்டுத்தனத்தினால் நம்பினேன். பலவீனமான, சக்தியற்ற நான், விடுபட்டுப்போன அந்த வளையத்தை உருவாக்கிப் பொருத்த முயன்றேன் . . . மழை நீரைக்கொண்டு உருவாகும் ஒருவகை மண் கரைசலிலிருந்துதான் செடிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்கின்றன என்பது எல்லாருடைய நம்பிக்கையாக இருந்தது. என் மனத்தினுள்ளும் இது ஆழமாகப் பதிந்தது. இந்தத் தவறான கருத்துதான் என்னுடைய முட்டாள் தனமான செயல்களுக்கெல்லாம் ஆரம்பம்."

8. பாரம்பரிய அறிவியல், இயற்கையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் சக்தி மனிதனுக்கு இல்லை என்றும் ஒவ்வோர் உயிரினத்தினுள்ளும் இருக்கும் ஒரு வகையான நுண்ணறிவுதான், அதன் வாழ்க்கையை இயக்குகிறது என்றும் நம்புகிறது.

NPK பற்றிய அறிவும் வேளாண்மையும்

"இவையெல்லாம் உண்மையாகவே இருந்தாலும்கூட, சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுப் பெயரிடப்பட்ட ழிறிரி போன்ற கனிமப் பொருள்கள் பற்றிய அறிவு, இயற்கை விவசாயத்துக்கும் தேவையான ஒன்றாகத்தானே இருக்கிறது?" என்ற கேள்வி எழலாம். பயறு வகைகளைக் கொண்டு பயிர்ச் சுழற்சிசெய்வதன் மூலம், நைட்ரஜன் சத்தை நிலத்தில் பொருத்தும் நுண்ணுயிர்கள் பெருகுகின்றன என்று நவீன அறிவியல் பயிர்ச் சுழற்சிக்கான விளக்கத்தை அளிக்கிறது. ஆனால், நமது பாரம்பரிய விவசாயி நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலே, பல நூற்றாண்டுகளாகப் பயிர்ச் சுழற்சி செய்துவந்திருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது? உள்ளுணர்வு மற்றும் அனுபவபூர்வமாக இந்த அறிவைச் சேகரித்து வந்திருக்கக்கூடும்.
இயற்கையுடனான உறவைத் துண்டித்துக்கொண்டுவிட்ட மக்களுக்கும் இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களுக்கும் அறிவைப் பெறும் முறைகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மலைவாழ் மக்கள், செடிகளுடன் 'பேசும்' திறன் படைத்தவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது அவர்கள் செடிகளோடு ஒருவிதமான தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த, 800 புதிய ரகக் காய்கறி, பழங்கள் மற்றும் பூக்களை இயற்கையோடு கைகோர்த்துக்கொண்டு உருவாக்கிய, அமெரிக்கத் தாவரவியலாளர் லூதர் பர்பாங்க், தன் செடிகளுடன் தனக்கு இருந்த தகவல் பரிமாற்றங்களைப் பற்றிக் கூறியுள்ளார். இவர் பண்ணையில் பயிரிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உருளைக்கிழங்கு செடிகளுடன் 'உரையாடி', அவற்றுள் மிக எளிதாக 8 செடிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றிலிருந்து இன்று உலகெங்கும் புழக்கத்தில் இருக்கும் பர்பாங்க் உருளையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.9
இவ்வாறு, நவீன மனம் நினைத்துப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத விதங்களில் அறிவைச் சேகரித்தது பாரம்பரிய மனம். நைட்ரஜன் பற்றிய அறிவு இல்லாமலேயே, பயிர்ச் சுழற்சியைப் பின்பற்றியது. ஆனால், நம்முடைய நவீன மனத்தின் புரிதலுக்காகப் பாரம்பரிய அறிவியலைப் பற்றிய விளக்கங்களில்கூட நவீன அறிவியலின் கோட்பாடுகளையும் மொழியையும் கடன்வாங்க வேண்டியுள்ளது!

நன்றி: சங்கீதா ஸ்ரீராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக