வெள்ளி, 9 ஏப்ரல், 2010

பஞ்சகவ்யம் தாயரிக்கும் முறை

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்


இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.


மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.


மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:


மூலப்பொருள்:


*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்


இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!


தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!


ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.


மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!


பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!


பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.




`பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை கிடைக்கும்?' - 
 இந்தக் கேள்வியை பஞ்சகவ்யத்தைக்  மீட்த்தொடுத்த டாக்டர் நடராஜனின் பதிவு:


 ``இப்படி, அப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான பலன்கள் பல கிடைத்திருக்கிறது விவசாயிகளுக்கு. குறிப்பாக, ஆயிரமாயிரமாக செய்துவந்த உரச்செலவு சுத்தமாக இல்லாமல் போயிருக்கிறது. மகசூலும் கணிசமாகக் கூடியிருக்கிறது'' என்று சொன்னவர் எந்தெந்த செடியில் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்பதையும் சொன்னார்.

மா

பூ பூக்கும் காலத்தில் மரத்தில் உள்ள எல்லா இலைகளையும் மறைக்கிற மாதிரி பூ பூக்கும். எவ்வளவு காற்று அடித்தாலும் பூ கொட்டாது. பூ பூத்து, நிறைய பிஞ்சுகள் விடும். பிஞ்சுகள் நன்கு காய்த்து, நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மாவைப் பொருத்தவரை ஒரு ஆண்டு அதிக விளைச்சல் தந்தால், அடுத்த ஆண்டு விளைச்சல் சரியாக இருக்காது என்பார்கள். பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் இந்தப் பிரச்னைகளுக்கு எளிதில் முடிவு கட்டிவிடலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை செடிகளுக்கு பஞ்சகவ்யத்தை ஊற்றினால், ஆண்டு முழுக்க பூக்களும் பிஞ்சுகளும் பழங்களும் மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். விளைச்சல் பெருகுவதோடு பழங்கள் நல்ல நிறத்துடன் அதிக நாட்கள் புத்தம் புதிசாக இருக்கும் பஞ்சகவ்யத்தில் வளரும் எலுமிச்சையில் சாறு அதிகம். ஊறுகாய்க்கு பிரமாதமாக இருக்கும். (இது மாதிரியான எலுமிச்சை புளியங்குடி அண்ணாச்சி அந்தோணிசாமியிடம் கிடைக்கிறது! )

முருங்கை

முருங்கை மரத்துக்கு பஞ்சகவ்யத்தைத் தெளித்தால் நிறைய பூ பூத்துக் குலுங்கும். இதில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் செஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள மல்லாண்டி கலைமணியின் தோட்டத்திற்குப் போய் பார்க்கலாம்.

``கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, வாழை, கரும்பு, மஞ்சள், வெற்றிலை, மல்லிகை, கத்தரி, தென்னை, நிலக்கடலை, எள், நெற்பயிர் என்று பலவற்றிலும் அடித்துப் பார்த்துவிட்டோம். அத்தனையிலும் அற்புதமான மகசூல்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் டாக்டர் நடராஜன்.


டாக்டர் நடராஜனைத் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

டாக்டர் கே.நடராஜன்,
தலைவர், கிராமப்புற சமுதாய செயல்மையம்,
ஆர்.எஸ். மருத்துவமனை வளாகம்,
கொடுமுடி, ஈரோடு-638 151.

போன்: 04204-222369, 222469.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக