வியாழன், 7 ஏப்ரல், 2011

இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு

பாசன முறைகளும் நீர்வள மேலாண்மையும்

நில வளம், கால்நடை வளம் ஆகியவற்றின் சரிவைப் பற்றிப் பார்த்தோம். இனி, நீர்வளம் வற்றியது பற்றியும் வறண்ட பாசன நிலங்கள் கெட்டுப்போன கதையையும் தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் நீர் வளம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சீரழியத் தொடங்கியது. அந்தச் சீரழிவு இன்றுவரை பலவிதங்களில் தொடர்ந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்புவரையிலான சரித்திரத்தை இக்கட்டுரையில் பார்ப்போம். சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைகளைப் பற்றி அடுத்துவரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

பாரம்பரிய முறைகள்

தத்தமது பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். வறண்ட, வானம் பார்த்த நிலங்களில், மானாவாரிப் பயிர்களான குழி வெடிச்சான் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, சோளம், குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்களையும் பயிரிட்டுவந்தனர். இயற்கையிலேயே நீர்வளம் மிகுந்த இடங்களில், அங்குள்ள தேவைகள், மண்வளம், கலாச்சாரம், தட்ப வெப்பத்திற்கு ஏற்ற பாசன அமைப்புகளைப் (கிணறுகள், ஏரிகள், வெள்ளப் பாசனக் கால்வாய்கள், ஊற்றுக்கால்கள், கசக்கால்கள்) புத்திசாலித்தனமாக வடிவமைத்துப் பராமரித்து வந்தனர். வாழ்வுக்கே ஆதாரமாக விளங்கும் இந்த நீர்நிலைகளைப் புனிதமாகக் கருதி வணங்கியும் வந்தனர். கோயில்களுக்குப் பிரயாணம் செய்துவருவதுகூடத் 'தீர்த்த யாத்திரை' என்ற பெயரிலேயே வழங்கப்பட்டது.

ஏரிகள்

தமிழ்நாட்டில் மட்டும் 44,000 பெரிய ஏரிகள் இருந்தன எனத் தெரிகிறது. சங்கிலித் தொடராக அமைந்த இந்த ஏரிகள் வழியெல்லாம் உள்ள நிலங்களைச் செழுமையாக்கிக் கடைசி மட்டத்தில் கோயில் குளங்களாக முடிந்தன என்பதையும் அறிய முடிகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடக்குப்பட்டுப் பகுதியின் விவரங்களைப் பார்த்தால், அங்கு ஐந்தில் ஒரு பங்கு (அதாவது, 680 ஹெக்டேரில் 136 ஹெக்டேர் பரப்பளவு) நீராதாரமாகவே இருந்திருக்கிறது. இதை அந்தப் பகுதியை 1774இல் சர்வே செய்த பெர்னார்டு என்னும் ஆங்கிலேயப் பொறியியலாளர் பதிவுசெய்துள்ளார்.

அன்றைய மைசூர் மாநிலத்தில், 29,500 சதுர மைல் பரப்பளவில், 38,000க்கும் அதிகமான ஏரிகள் (கன்னட மொழியில் 'கேரே'க்கள்) இருந்தனவாம். மேஜர் சாங்க்கே என்ற ஆங்கிலேயப் பொறியியலாளர் ஒருவர், இவற்றைப் பற்றிக் கூறும்போது, "இந்தியர்கள் எந்த அளவுக்கு நீர் அறுவடை அமைப்புகளை அமைத்துள்ளனர் என்றால், இனிப் புதிதாக எங்காவது ஒன்று அமைக்க வேண்டும் என்று எண்ணினால்கூட, அதற்கான இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்!" என்று கூறியுள்ளார்.


வெள்ளப் பாசனக் கால்வாய்கள்

பாரம்பரியமாக நதிகள் மற்றும் கால்வாய்கள் அனைத்தும் வெள்ளப் பாசனம் செய்துவந்தன. அதாவது, வெள்ளம் பெருக்கெடுக்கும்போது அவை வழிந்து, நதியின் இரு புறங்களிலும் உள்ள வயல்கள் மூழ்கிவிடும். இதன் மூலம் அந்த வயல்களில் பாசனம் நடைபெறும். உலகிலேயே மிகப்பெரிய அணைகளுள் ஒன்றான, எகிப்து நாட்டின் அஸ்வான் அணைக்கான திட்டத்தை வகுத்த வில்லியம் வில்காக்ஸ் என்ற ஆங்கிலேய நீர்ப்பாசனப் பொறியியலாளர் இதை விளக்கியுள்ளார். 1930ஆம் ஆண்டு வங்காளப் பல்கலைக்கழகத்தில் "வங்காளத்தின் பண்டைய நீர்ப்பாசன முறை" என்னும் தலைப்பில் அவர் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளில் இந்தமுறையை அழகாக விளக்கியுள்ளார்:

வங்காளத்தில் ஓடும் தாமோதர் நதியின் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்கள், நதியின் கரையைச் சற்றே உயர்த்தி வைத்துக்கொண்டனர். நிலத்தைச் சற்று உயர்த்தி, தங்கள் வீடுகளை அதன்மேல் கட்டிக்கொண்டனர். பருவ மழையின்போது, விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கும்போது நெல் விதைகளை விதைத்தனர். நெல் நாற்றுகள், கொசுக்களின் புழுக்கள் (larvae) நிறைந்த சேற்று நிலங்களில் வளர்ந்து நின்றன. பருவமழையின் உச்சகட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ளம் ஒரு பெரிய நிலப்பரப்பில் பரவியதால், நீர்மட்டம் மெதுவாக அதிகரித்தது. மேலும், மக்களுக்கு வெள்ளத்தின் அளவு, வெள்ளம் நீடிக்கும் காலகட்டம் போன்றவை பற்றிய அறிவு இருந்ததால், அவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டனர். நெல் நாற்றுகளை எடுத்து நடுவதற்குள், உயர்த்திய கரை தானாகவே சில இடங்களில் உடைந்துபோனது. விவசாயிகளும் தாமாகவே சில இடங்களில் கரையை உடைத்துவிட்டனர். வயலுக்குள் மெதுவாகப் பாய்ந்தோடி வந்த நதிநீர், தன் கூடவே வளமான சேற்றுப்படிவுகளையும் (silt) சிறு மீன்குஞ்சுகளையும் கொண்டுவந்தது. இந்த மீன்குஞ்சுகள் நீரில் வாழும் கொசுப் புழுக்களைத் தின்றுவிட்டு, தன் கழிவுகளைக் கொண்டு நிலத்தை மேலும் வளப்படுத்திவிட்டு, நீர்வற்றும்போது ஆங்காங்கே விவசாயிகள் வெட்டியிருந்த குட்டைகளுக்குள் சென்று இனப்பெருக்கம் செய்துகொண்டன. மழையில்லாத காலங்களிலும் இந்தப் பண்ணைக் குட்டைகள் கைகொடுத்தன. மழை ஓய்ந்த பின், கரையை மீண்டும் பலப்படுத்திவிட்டு மக்கள் தங்கள் வேலைகளைப் பார்த்தனர். நீரில் உள்ள ஈரப்பதம், பருப்பு, எண்ணெய் வித்துகள் போன்ற இன்னொரு அறுவடைக்கும் உதவியது.

எப்பொழுதாவது ஒருமுறை, பெரிய வெள்ளம் வந்து பயிர்களையும் வீடுகளையும் சேதம் செய்து விட்டுப்போனது உண்மைதான். ஆனால், வெள்ளங்கள் கொண்டுவந்த செழுமையான வண்டல் மண்ணின் மகத்துவத்தை நன்கு அறிந்த மக்கள், அந்தச் சேதத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. "பாலான் (நதி) இந்த ஆண்டும் பெருகி வழியட்டும்; வீடு சேதமடைந்தால் பழுதுபார்த்துக்கொள்ளலாம். வழிந்தோடவில்லையென்றால், வீட்டிலிருக்கும் பொருள் அனைத்தையும் இழந்துவிடுவோம்!" என்று பீஹார், மிதிலையில் ஒரு பழமொழி வழங்கிவந்திருக்கிறது.

1871இல், புர்னியா மாவட்டத்தின் ஆட்சியாளர், வெள்ளத் தடுப்பு அணைக்கான திட்டக் கோரிக்கையை நிராகரித்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "பொதுவாகவே, பருவகால வெள்ளத்தால் பயிர் சேதமடையும் ஆண்டுகளிலெல்லாம் அதற்கடுத்த அறுவடை அபரிமிதமாக வந்து, இழப்பை ஈடுகட்டிவிடுகிறது" என்பதுதான்.


இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வெள்ளத்தை எதிர்பார்த்து, வரவேற்றுக் கொண்டாடித் தங்கள் வேளாண்மையை மேற்கொண்டனர் அப்பகுதியின் மக்கள். தமிழ்நாட்டில் தங்கள் குடும்பப் பண்ணையிலும் இப்படி நடந்ததாகத் திருவண்ணாமலை மேல்பெண்ணாத்தூர் இயற்கை விவசாயி கோதண்டராமன் வருணிக்கக் கேட்டிருக்கிறேன்.

இதைத் தவிர கசக்கால்கள், ஊற்றுக்கால்கள் போன்ற உள்ளூர் அமைப்புகளும் பாசனத்திற்கு உதவின. இவை மேற்பரப்பு நீராதாரங்களின் கசிவுகளால் மற்றும் நிலத்தடி நீர் ஊற்றுகளால் ஆனவை.


ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய காலங்களில், நீராதாரங்கள் கிராம அளவில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டன. உதாரணத்திற்கு, 1760களில் வடக்குப்பட்டுப் பகுதியில், ஆண்டிற்கு 45 டன் உணவு தானியம் நீர்ப்பாசன மேலாண்மைக்காக, ஏரி வாரியத்திற்கான நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது.


ஆண்டுதோறும் நீராதாரங்களைப் பழுதுபார்த்துப் பராமரிக்க, தமிழ் நாட்டில் குடிமராமத்து என்கிற மக்களின் தன்னார்வக் கூட்டுப் பணி முறையும் மேற்கொள்ளப்பட்டது.பாரம்பரிய நீர்வள மேலாண்மை முறைகள் பொதுவாகச் சிறப்பாக இயங்கினாலும், அவற்றின் பலன்களை அனுபவிப்பதில் சாதி அடிப்படையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கீழ்ச்சாதியினர், நல்ல தரமான நீர் கொண்ட மேல்சாதியினரின் கிணறுகளை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டது. பாரம்பரியக் கால்வாய்கள் மூலம் பாசன நீர், சங்கிலி போன்றமைந்த பண்ணைகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பாய்ந்து, இறுதியில் ஒரு பண்ணையில் தங்கிவிடும். பொதுவாக மேல் மட்டத்தில் அமைந்த பண்ணைகள் மேல்சாதியினருடையதாகவும் கடைசிக் கீழ்மட்டத்தில் அமைந்த பண்ணைகள் கீழ்ச்சாதியினருடையதாகவும் இருந்தன. கடைசிப் பண்ணையில் நீர் வடியப் போதிய வசதிகள் இல்லாமல், அங்கேயே தேங்கி அந்த நிலத்தின் உப்புத்தன்மை சற்றே அதிகமாக இருந்தது.


இத்தகைய பாரபட்சமான போக்கு களையப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதற்கும் ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மாற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகள்

இந்தியாவின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்புகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எப்படிப் பாதிப்புக்குள்ளாயின என்பதை இப்போது பார்ப்போம். ஆங்கிலேயர்கள் மையப்படுத்தப்பட்ட வரிவிதித் திட்டத்தை அமல்செய்து நீர் மேலாண்மையை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டார்கள். சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நீர்வள மேலாண்மை, இதனால் எந்த அளவில், எந்தவகையில் பாதிக்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை அவர்களே கூறக் கேட்போம்.

1838இல் ஜி. தாம்ஸன் என்பவர் இவ்வாறு எழுதினார்: "நாட்டின் நலனுக்காக, இந்து மற்றும் இஸ்லாமியர்களால் கட்டப்பட்ட சாலைகளும் குளங்களும் கால்வாய்களும் பராமரிப்பே இன்றிச் சீரழிந்துவருகின்றன!"9 1858இல் மோண்ட்கோமரி மார்டின், "கிழக்கிந்தியக் கம்பெனி, புதிதாக வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள பொது இடங்களைப் பழுது பார்த்துப் பராமரிப்பதும் கிடையாது!" என்று குறைகூறினார்.

பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் (British House of Commons) சபையில், 1858 ஜூன் 24 அன்று ஜான் பிரைட் என்பவர், "மான்செஸ்டர் நகரில் ஓராண்டில் தண்ணீருக்காகச் செலவழிக்கும் தொகையைவிட, 14 ஆண்டுகளில் (1834-1848) பொதுப்பணிகளுக்காக இந்திய நாடு முழுவதும் செலவழிக்கப்பட்ட தொகை குறைவானது." என்று கணக்கிட்டுக் காட்டினார்.

1854இல் பொதுப்பணித் துறை பஞ்சாப்பில் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் இந்த முறை பரவியது. சாதாரணமாக உள்ளூர் நிர்வாகக் குழுவே தேவைகளை அறிந்து, துரிதமாக முடிவெடுத்து வேலைகளை மேற்கொண்ட முறை மறைந்தது. நிர்வாகம் மையப்படுத்தப்பட்டதால் எல்லாவற்றுக்கும் அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு மக்கள் ஆளானார்கள். வோல்கர் இது பற்றி விரிவாக விளக்குகிறார்: "மதுரை மாவட்டத்து விவசாயிகள், ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் நிகழும் தாமதத்தைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள். தாசில்தாருக்குச் செய்தி கிடைத்தவுடன், அவர் துணை மாவட்ட ஆட்சியாளரிடம் செல்கிறார்; அவர் மாவட்ட ஆட்சியாளரிடம் செல்கிறார்; அவர், பொதுப்பணித் துறையின் நிர்வாகப் பொறியாளரிடம் முறையிடுகிறார்; இவர், தலைமைப் பொறியாளருக்கு எழுதுகிறார் (அதுவும், மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரேயொரு தலைமைப் பொறியாளர் திருச்சியில் இருக்கிறார்); இவர், மதராஸிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு இதன் முன்னுரிமை பற்றிச் சிபாரிசு செய்கிறார். ஆக மொத்தத்தில் இது ஒரு நீண்ட நெடிய செயல் முறையாக உள்ளது. இதெல்லாம் முடிவதற்குள் பொதுவாக அந்த ஆண்டின் பயிர் போதிய நீரில்லாமல அழிந்துவிடுகிறது!

இப்படி, அதிகாரம் மக்களின் கைகளைவிட்டு விலகியதன் விளைவாக, நீராதாரங்களைப் பராமரிக்கும் பொறுப்புணர்ச்சியும் அவர்களிடமிருந்து மறையத் தொடங்கியது. இதனை வோல்கரே விளக்குகிறார்: "நாம் இன்றும் வியக்கத்தக்க மாபெரும் ஏரிகளையும் கால்வாய்களையும் ஒரு காலத்தில் மக்கள் தாங்களாகவே உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதே மக்கள் இன்று புதிய பணிகளை மேற்கொள்ளும் நிலையில் இல்லை. மாறாக, அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்றனர். 1850களில் தமிழ்நாட்டின் குடிமராமத்து முறையும் சிதையத் தொடங்கியது.

இந்திய விவசாயத்தின் சீரழிவை விளங்கிக்கொள்ள அரசாங்க / நிர்வாக முறைகள் மற்றும் பாசன அமைப்புகளின் தொழில்நுட்பம் ஆகியவற்றின் தன்மைகளைப் பற்றிய சரியான புரிதல் மிகவும் அவசியம். பண்டைய காலத்தில் உள்ளூர் நிர்வாகம், பாசன அமைப்பு முறைகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவை அனைத்தும் மக்களிடமே இருந்துவந்தது. கூடவே, அவற்றுக்கான அதிகாரம், கட்டுப்பாடு, பொறுப்பு ஆகியவையும் இருந்தன. ஆங்கிலேயர் நிறுவிவிட்டுச் சென்ற, மையப்படுத்தப்பட்ட அரசாங்க மற்றும் நிர்வாக முறைகள் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்தன. மாபெரும் அணைக்கட்டுகள், கால்வாய் அமைப்புகளை வடிவமைப்பது, உரு வாக்குவது, இயக்குவது, பராமரிப்பது ஆகியவற்றுக்கு இயல்பாகவே மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் தேவைப்பட்டது. அதிகார அமைப்பில் ஏற்கனவே தீவிரமடைந்து வந்த மையப்படுத்தப்பட்ட அதிகாரக் குவிப்பை இவை மேலும் வலுப்படுத்தின. இந்த மாற்றம் நீர்வள ஆதாரங்கள்மீது மக்களுக்கு இருந்த உரிமையையும் பொறுப்பையும் மறுத்து அவர்களை அந்நியப்படுத்தியது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தண்ணீருடன் மக்களுக்கு உருவாகி நிலைபெற்றிருந்த புனிதமான உறவு, ஒரே தலைமுறை இடைவெளியில் துண்டிக்கப்பட்டது; தங்களுக்கும் அதற்கும் ஏதோ தூரத்துச் சொந்தம் மட்டும் ஒட்டியிருப்பதுபோல மக்கள் நடந்துகொள்ளத் தொடங்கினர். அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த அடிப்படை மாற்றம் நமது விவசாயம் சீரழிந்த கதையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் சாதி ஏற்பாடுகள் சிலவற்றால் பாரம்பரிய நீர் வள மேலாண்மை அமைப்புகள் சிதைந்ததாகவும் அதே காலகட்டத்தில் இராஜஸ்தானில் சில புதிய மழை நீர் அறுவடை அமைப்புகள் கட்டப்பட்டதாகவும் சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.14 ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நம் நாட்டின் நீராதாரங்கள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் படிப்படியாகச் சீர்குலைந்து வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

நிரந்தரப் பாசனம்: கால்வாய்கள், அணைகள், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள்

'வறண்ட நிலங்களுக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கச்செய்துவிட்டால், அள்ளிக்கொடுக்கும் பணப்பயிர்ப் பண்ணைகளை விரிவாக்கி இலாபம் எடுத்துக்கொள்ளலாமே!' என்று ஆங்கிலேயரின் வணிக மூளை சிந்தித்தது. இந்த யோசனை, இந்திய வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் மாபெரும் கால்வாய்களாக 19ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அதற்குச் சற்று முன்னரே தொடங்கியிருந்த அணைக்கட்டுகள் மற்றும் அணைகளின் கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்தன.

மேலோட்டமாகப் பார்த்தால் நதிகளில் ஓடும் தண்ணீரைத் தடுப்புகள் மூலம் தேக்கி, கால்வாய்களின் மூலம் திசைதிருப்பும் அமைப்பு மிகவும் நன்மை விளைவிக்கும் ஒரு ஏற்பாடாகவே தெரியும். பாசன வசதி கொண்டு வளரும் மெல்லிய நெல் ரகங்கள் போன்ற பயிர்கள் பெருக இந்த அணைகள் காரணமாக அமைந்தன என்பது உண்மைதான். ஆனால், அது உண்மையின் ஒரு பாதி தான். பலருக்குத் தெரியாத அதன் மறுபாதி மிகவும் கசப்பானதாகும். ஆல்பர்ட் ஹோவார்ட், நிரந்தரக் கால்வாய்ப் பாசனத்தின் எதிர்மறை விளைவுகளைப் பற்றிப் பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வறண்ட நிலங்களிலெல்லாம் இயற்கையிலேயே கரையக்கூடிய பல வகையான உப்புகள் (soluble salts) உள்ளன. அதிக அளவுகளில் நீரைப் பாய்ச்சி வடிகால் வசதிகளைச் சரியாகச் செய்யாவிட்டால், அங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அந்த நீர் ஆவியாகும்போது, அதனுடன் உப்புகளும் நிலத்தின் மேற்புறத்திற்கு வந்து கட்டிகளாகத் தங்கிவிடும்.

இப்படி, 19ஆம் நூற்றாண்டில் கால்வாய்களின் உதவியுடன் நிரந்தரமான பாசனம் செய்து நெல், கரும்பு, பருத்தி, கோதுமை போன்ற பயிர்களை விளைவித்த வறண்ட நிலங்களெல்லாம், முக்கியமாக வடிகால் வசதிகள் இல்லாத நிலங்களெல்லாம், வெகு விரைவில் உப்பு நிலங்களாக மாறத் தொடங்கின. மண்ணில் உப்பின் அளவு அதிகரித்தால், அதில் நுண்ணுயிர்கள் வாழ முடியாமல் நிலம் வளமிழக்கத் தொடங்கும். அந்த மண் விரைவிலேயே மலடாகிவிடும்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 1885ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது 'நிரா இடதுகரைக் கால்வாய்' (Nira Left Bank Canal). நான்கே ஆண்டுகளுக்குப் பின் அதைச் சார்ந்த 81,000 ஏக்கர் நிலத்துள், 9,100 ஏக்கர் ஒன்றுக்கும் உதவாத உப்பு நிலமாக மாறியது; 27,000 ஏக்கர் நிலம் கணிசமான அளவுக்குச் சேதமாகியிருந்தது. இப்படி, 1947க்குள் இந்த ஒரு மாநிலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 64,000 ஏக்கர் நிலங்கள் உப்பு நிலங்களாக மாறின!

1900இல் எஃப். ஹெச். கிங் இவ்வாறு எழுதுகிறார்: "நவீன பாசனமுறையின் விளைவாக, இந்தியா, எகிப்து, கலிபோர்னியா ஆகிய இடங்களில் மண்ணின் உப்புத் தன்மை அதிகரித்துள்ளது என்பது முக்கியமான உண்மை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அதே மண்ணில் பாரம்பரிய முறையில் நீர்ப்பாசனம் செய்து, பயிர் விளைவித்த அணுகுமுறையிலிருந்து விலகிச் சென்றவர்கள் நிறுவிய முறை இது.

கிழக்குப் பஞ்சாபில் நிரந்தரக் கால்வாய்கள் அறிமுகமானதிலிருந்து, விவசாயிகள் ஏற்றுமதிக்கான கோதுமை, எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்கு மாறிவிட்டார்கள்; நிலவளத்தைப் பாதுகாக்கும் பயிர்ச்சுழற்சி முறையை மறந்தேபோய்விட்டார்கள்!" என்று ஹோவார்ட் கால்வாய்ப் பாசனத்தின் மற்றொரு விளைவையும் சுட்டிக்காட்டுகிறார்.

1998இன் கணக்கின்படி இந்தியா முழுவதுமாக 164.4 லட்சம் ஏக்கர் நிலங்களில் கால்வாய் நீர் வடியாமல் தேங்கியோ உப்பு நிலங்களாக மாறியோ விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

நவீன நிரந்தரப் பாசனக் கால்வாய்களின் முக்கியமான விளைவு மற்றொன்று உண்டு. கால்வாய்ப் பகுதி மக்கள் ஊட்டச்சத்துமிக்க உணவை, முக்கியமாகச் சிறு தானியங்களைப் (மானாவாரிப் பயிர்களை) பயிரிடுவதை விடுத்துப் பணப்பயிர்களுக்கு மாறிவிடுகின்றனர். இதனால், இந்த மக்களுக்கிடையே சத்துக் குறைவு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு, இராஜஸ்தானில் இந்திராகாந்திக் கால்வாய் வந்ததற்குப் பிறகு, கால்வாய்ப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கம்பு பயிரிட்ட நிலங்களில் பருத்தி பயிரிடத் தொடங்கினர். இதனால் குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைப்பது குறைந்துபோனது.19 இது போன்றே, நிரந்தரப் பாசனம் அறிமுகமான இடங்களில் உணவுப் பயிர் நிலங்கள் பணக்கார விவசாயிகள், சர்க்கரை ஆலை முதலாளிகளின் பெரிய கரும்புத் தோட்டங்களாக மாறி, ஏற்றுமதிக்கான சர்க்கரையை உற்பத்திசெய்த கதைகளும் பலவுண்டு. இது, நம் நாட்டின் நீரை ஏற்றுமதி செய்வதற்குச் சமமாகும்.

வெள்ளத் தடுப்புக் கரைகள்

ஆண்டுதோறும் வெள்ளத்துடன் ஒத்துழைத்து, வேளாண்மையை மேற்கொண்ட முறையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், ஆங்கிலேயப் பொறியியலாளர்கள் வெள்ளக் கட்டுப்பாடு (flood control) என்கிற ஒரு முற்றிலும் புதிய கருத்தை அறிமுகம் செய்தனர். 1855இல், தாமோதர் நதியின் இருபுறமும் உயரமான வெள்ளத் தடுப்புக் கரைகள் எழுப்பும் பணியில் இறங்கினர். அதே சமயத்தில் இந்தப் பகுதியில், இரயில் தண்டவாளங்களையும் சாலைகளையும் 1860இல் கட்டி முடித்தனர். அடுத்த ஆண்டின் (1861) பருவ மழையில், இந்த மூன்றிற்கிடையே தண்ணீர் பெரிய குளங்களாகத் தேங்கி, அதன் விளைவாக மலேரியா நோய் பரவியது. அதுவரையில், நதியிலிருந்த மீன்குஞ்சுகள் கொசுப் புழுக்களைத் தின்றுவந்ததால் இந்தப் பகுதியில் மலேரியா என்றுமே ஒரு பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. மக்கள் தண்ணீரைத் தங்கள் பண்ணைகளிலிருந்து வடிப்பதற்காக, வெள்ளத் தடுப்புச் சுவர்களை அங்குமிங்குமாக உடைக்கத் தொடங்கினர். வண்டல் மண் நிலத்தில் பரவ வாய்ப்பில்லாமல், நதிப்படுகையிலேயே தங்கியதால் நதியின் கொள்ளளவு குறைந்தது. இதை ஈடுசெய்ய, கரையை மேலும் உயரமாக எழுப்பினர் ஆங்கிலேயர். காட்டு வெள்ளம் வரும்போது, இந்தச் சுவர் போன்ற கரைகள் ஆங்காங்கே உடைந்து, கிராமங்கள் அழிந்தன. நீர்வளம் பெருக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஒரு சமூக சேவகர் சொல்வதுபோலப் "பூனையைப் போலச் சத்தமில்லாமல் நுழைந்த வெள்ளம், இப்போது சிங்கத்தைப் போல கர்ஜித்துக்கொண்டு பாய்ந்தது!"

இந்தக் காட்டு வெள்ளத்தினால் பயிர்கள் சேதமானது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் தவறாமல் கிடைத்துக்கொண்டிருந்த வளமான வண்டல் மண் கிடைக்காமல் போனது. அதோடு இருந்த வளமான மேல்மண்ணையும் அரித்துக் கொண்டுபோனது. இப்படியெல்லாம் 'சும்மா வந்து சோறு போட்டுக் கொண்டிருந்த' தாமோதர் நதியுடன் வம்புக்குப் போனார்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்கள். இதன் விளைவுகள் விபரீதமானதும் "வங்காளத்தின் துயரம்" (Sorrow of Bengal) என்று அதன்மீதே அநியாயமாகப் பழிசுமத்தி, அதனைக் கட்டுப்படுத்த எண்ணித் தோற்றுப்போன ஆங்கிலேயர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். 1869இல், 32கிமீ நீளத்திற்கு வெள்ளத் தடுப்புக் கரையை இடித்துத் தள்ளினர். பல வடிகால் வசதிகளைச் செய்தனர். இனி அத்தகைய கரைகளைக் கட்டவே கூடாது என்று உறுதிபூண்டனர். அதேபோல, 1947வரை அவர்கள் அந்தப் பேச்சை எடுக்கவேயில்லை!

1954ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கம் 'வெள்ளக் கட்டுப்பாட்டுக் கொள்கை'யை மீண்டும் அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டு, பீஹார் மாநிலத்தின் வெள்ளத் தடுப்புக் கரையின் நீளம் 160 கிமீ ஆக இருந்தபோது, 25 லட்சம் ஹெக்டேர் நிலம் வெள்ள அபாயத்திற்குள்ளாகக்கூடிய நிலப்பரப்பாக (flood prone area) இருந்தது. ஆனால், 2004இல் 3,430 கி.மீ. நீளமாக அதிகரித்துள்ள வெள்ளத் தடுப்புக் கரையினால், 68.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வெள்ள அபாயத்துக்குள்ளாகக்கூடிய நிலப்பரப்பாக அரசாங்கமே அறிவித்துள்ளது. இத்தகைய ஏற்பாடுகளினால், விவசாய நிலம் உப்பாதல், தண்ணீர் தேங்குதல், மேல்மண் அரித்தல், வண்டல் மண் கிடைக்காமல் போதல், பயிர்ச்சேதம் போன்றவையும் சில தனிநபர்களின் பேராசையினால் (கட்டுமானத் தொழிலில் உள்ள இலாப ஏற்பாடுகளினால்) அதிகரித்துக்கொண்டே போனது என்பது நமது கதையுடன் தொடர்புள்ள முக்கியமான தகவல்.


வளமாக இருந்த நம் விவசாய நிலங்கள் எப்படித் தமது வளத்தை இழக்கத் தொடங்கின என்பதைச் சென்ற கட்டுரையிலும் இந்தக் கட்டுரையிலும் பார்த்தோம். ஆனால் இந்தக் காரணங்களால்தான் நமது நாட்டில் பஞ்சங்கள் ஏற்பட்டு, பசுமைப் புரட்சியை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டோ ம் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்த மாற்றங்களைப் பசுமைப் புரட்சிக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஆங்கிலேயர்களால் நமது விவசாயத்தில் ஏற்பட்ட அடிப்படையான மாற்றத்திற்குப் பிறகும் நிலைமை கைமீறிப் போய்விடவில்லை. 1900இல் குஜராத்தில் ஏற்பட்ட பெரும்பஞ்சத்தின்போது, இரண்டாண்டுகளுக்குத் தேவையான உணவு தானியங்கள் வியாபாரிகளின் கிடங்குகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. 1943இல் வங்காளத்தில், 35 லட்சம் பேர் இறந்துபோன கடுமையான பஞ்சத்தின்போதும் 80,000 டன் உணவு தானியங்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆம், இத்தனை காயப்படுத்தியும் மண் நமக்கு அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்த உணவை மக்களுக்குச் சேரவிடாமல் செய்தது, பல அரசியல், பொருளாதார நிகழ்வுகள்தான்.

நன்றி:-
சங்கீதா ஸ்ரீராம்

வியாழன், 27 ஜனவரி, 2011

ஆழ் நீர் நெல் சாகுபடி – பொக்காலி

ஆழ் நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது , பிலிப்பைன்ஸ், தாய்லாந், பர்மா , போன்ற நாடுகளில் அதிகம் , இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும் செய்யப்படுகிறது.கேரளாவில் ஆலப்புழா,எர்ணாக்குளம், திரிசூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு பொக்காலி நெல் என்று பெயர்.

அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.

இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்

எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.

நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.

சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 – 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 – 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொக்காலி நெல்வகை – IR 64,
இறால் வகை – வெள்ளை இறால், டைகர் இறால்

கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

உணவு உற்பத்திக்கு அடிப்படையானது விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண். மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம். மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல. அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள். அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது. அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான மண்ணிலிருந்து விளையும் உணவும் ஆரோக்கியமானது. விவசாயத்தின் முதல்பணி, மண்ணை மக்கு உரமாக மாற்றுவதுதான். ”வேளாண்மை உயில்” என்ற காவியத்தைப் படைத்த ஆல்பெர்ட் ஹாவொர்ட், இந்தூரில் நீடிக்க முடிந்ததா? மண்ணை வளப்படுத்த கம்போஸ்ட் போதும் என்று போதித்த ஹாவொர்டுக்கு எதிர்ப்பு வந்தது. புசாவை விட்டு வெளியேறிய ஹாவொர்ட் மத்திய இந்தியாவுக்கு வந்தார். முதலில் பருத்திக் கமிட்டி ஆதரவை நல்கினாலும் கூட, ஹாவொர்ட் தன் சொந்த பலத்தை நம்பினார்.

மண் வளமைக்கும் மகசூலுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வே ஹோர்வார்டின் குறிக்கோள். 1924-31 காலகட்டத்தில் இந்தூரில் ”பயிர்தொழில் நிறுவனம்” அதாவது ”The Institute of Plant & Industry” ஐ நிறுவ இவர் தன் நண்பர்களிடம் நிதி திரட்டியது குறிப்பிடத்தக்கது. அரசின் செலவில் செய்யவில்லை. ஒரு வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் இந்தியாவில் விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் ’ராயல் கமிஷன் ஆஃப் அக்ரிகல்ச்சர்’ சார்பாக லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆல்பர்ட் ஹாவொர்ட், எந்தவிதத்திலும் கடமை தவறவில்லை. உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்பதுடன் ரசாயன உரத்தைவிட இயற்கை வழி விவசாயத்தின் கூடுதல் மகசூல் பெற முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே இந்தூர் பயிர்த்தொழில் நிறுவனம் உருவானது. மத்திய இந்தியா - இந்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பருத்தி முக்கிய வணிகப்பயிர். நல்ல விளைச்சலுக்கு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்பதே அவர் கருத்து. அந்தக் கருத்தில்தான் “Indore Process Of Humus Production” உருவானது மட்டுமல்ல, அதே பெயரில் இந்த “இந்தூர் ப்ராஸஸ்” எவ்வாறு இங்கிலாந்திலும் பின்னர் அமெரிக்காவில் பென்ஸில்வேனியாவிலும் பரவியது என்பதை இக்கட்டுரையில் கவனிப்போம்.

நாம் ஏற்கனவேயே விவரித்தப்படி 1 மடங்கு கால்நடைக்கழிவான சாணம்+மூத்திரத்துடன், 3 மடங்கு அறுவடைக் கழிவுகளான கட்டைப்புல், வைக்கோல், துவரை, கடலை, உளுந்து போன்ற கொடிகள், மரத்தூள் போன்ற கார்பன் பொருள்களுடன் மக்கவைத்து வழங்கும் முறைதான் ”இந்தூர் ப்ராசஸ்” இம்முறையில் இவர் தயாரித்து வழங்கிய்தைப் பயன்படுத்திய பருத்திப் பயிருக்கு மும்மடங்கு விளைச்சல் உயர்ந்தது. இவ்வாறு இயற்கை உரம் வழங்கும் போது எப்போதுமே விளைநிலத்திலுள்ள மண்ணைப் பாதுகாக்கும் அளவில் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் கரிமப்பொருள்கள்+தழைச்சத்துப் பொருள்களான கால்நடைக்கழிவுப் பொருள் கலந்த கலவையை மக்கவைக்கும் பணியை நிகழ்த்துவது. இரண்டாவதாக மண்ணுக்குச் சற்று ஒய்வுதந்து பயிர் எழுப்புதல்.

பருத்தி விளையும் மத்திய இந்தியாவில் உள்ள இந்தூரை மையமாகக் கொண்டு இந்தூர்ப் பயிர்த்தொழில் நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளை ”Waste Products of Agricultrue : Their Utilisation as Humus” என்ற பெயரில் இவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை மேலை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. தமிழில் ”வேளாண்மைக் கழிவுப் பொருள்கள்: வேரின் கரிம விழுதுகளாகப் பயன்பெறுதல்” எனலாம். ஹாவொர்ட் பிரிட்டிஷ் அரசின் வேளாண்மை ஆலோசகர் என்ற முறையில் தான் எழுதிய மேற்படி ஆய்வுக் கட்டுரையை நூல் வடிவமாக்கி பருத்திப் பயிர் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார். எதிர்ப்பு அலை உருவானது. ரசாயன உர நிறுவனங்களும், ரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளாகவே செயல்பட்ட விவசாய விஞ்ஞானிகளும் ”இந்தூர் ப்ராசஸ்” ஒத்துவராது என்று புறந்தள்ளினர். அவர்களின் கருத்துப்படி, ”பருத்தியில் இனப்பெருக்க ஆய்வின் மூலமே விளைச்சலை உயர்த்த முடியும், நோயுற்ற பருத்திப் பயிரில் பூச்சி மருந்து அடித்தால்தான் உற்பத்தி உயரும்” என்று மறுத்துப் பேசினர். உண்மையில் உகந்தவாறு ஹாவொர்ட் முன்மொழிந்துள்ள இந்தூர் முறை கம்போஸ்டிங்கைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்திருந்தால் மண்ணும் பாதுகாப்பைப் பெற்று மகசூலிலும் புதிய எல்லைகளைத் தொட்டிருக்க முடியும். ஆனால் ரசாயன உர நிறுவனங்களுக்கு அடிவருடிகளாகச் செயலாற்றும் விவசாய விஞ்ஞானிகள், ”மண்ணுக்கு ஓய்வு தேவை” என்ற கூற்றை மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு, மண்ணை ஓய விட்டால் உற்பத்தி குறையும் என்று மடக்கிவிட்டனர்.

1935-இல் ஹாவொர்ட் இங்கிலாந்து - அவருடைய தாய் நாட்டுக்குத் திரும்பியதும், கேம்பிரிட்ஜ் வேளாண்மைப் பல்கலைக்கழகம் அவரைப் பேச அழைத்தது. அவரது பயிற்சி முறைகளையும், ஆய்வு முறைகளையும் அறிய ஆவலாயிருந்தவர்கள் கல்லூரி மாணவர்களே தவிர ஆசிரியர்கள் அல்லர். வேளாண்மைப் பேராசிரியர்கள் இவரது இந்தூர் கம்போஸ்ட் மூலம் மண்ணில் கரிம விழுதுகளை உருவாக்கும் நல்வழிக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதில் முனைப்பாயிருந்தனர். இயற்கை விவசாயத்திற்கு எந்த ஊக்கமும் வழங்கக்கூடாது என்பதில் வேளாண்மைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாயிருந்தனர். ஏனெனில் அவர்கள் ரசாயன உரநிறுவனங்களுக்கு விலை போய்விட்டனர். இயற்கை வழியில் உற்பத்தியை உயர்த்தலாம் என்பதை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

எனினும் விவசாயிகள் சங்கம் அவருடைய யோசனைகளில் ஆர்வம் காண்பித்தது. அதேசமயம் உர நிறுவனப் பிரதிநிதிகள், ”மகசூலுடன் மண்வள மீட்பு” என்ற கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த போது, சர் பெர்னார்டு கிரின்வெல் என்பவர் தனது நிலம் முழுவதிலும் ஹோவார்டின் யோசனையைப் பின்பற்றினர். இரண்டாண்டுக்குப் பிறகு அவர் எதிர்பார்த்ததற்கு மேலாகவே மண்வள மீட்புடன் பயிர் விளைச்சலும் ஏகபோகமாக இருந்தது. ஒரு பக்கம் வேளாண்மைத்துறை இயற்கை விவசாயத்திற்கு ஊக்கம் வழங்க மறுத்தாலும், மறுபக்கத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரவை இவருடைய பணிகளை கவுரவித்து, ”வீரப்பதக்க விருது” (KNIGHTHOOD) வழங்கியது. இன்றைய தமிழ்நாட்டில் என்ன நிகழ்கிறதோ அதுபோலவே அன்றைய இங்கிலாந்தில் நிகழ்ந்தது.


ஈவா பெல்ஃபோர்

நல்ல புத்தியுள்ள சில விவசாயிகள் மட்டும் ஹாவொர்ட் எடுத்துக்காட்டும் இயற்கை விவசாயத்தில் கால்பதித்தனர். அவர்களில் ஒருவர் ஈவா பெல்ஃபோர் (Eve Belfour) சிறுவயதிலிருந்தே இந்த அம்மையாருக்கு ஜலதோஷமும் வாதநோயும் இருந்தது. உடல்வலி தாங்கமுடியாமல் அவதிப்பட்டார். இவர் சஃபோக் அருகில் உள்ள ஹாலே என்ற இடத்தில் உள்ள தன்னுடைய நிலத்தை இயற்கைக்கு மாற்றினார். ஹாவொர்ட்கூறிய ”இந்தூர் ப்ராசஸ்” இவருக்கு நன்கு கைகொடுத்தது. இவ்வாறு இயற்கை வழியில் தன்னுடைய நிலத்தில் விளைந்ததை உகந்த முறையில் பக்குவப்படுத்தி உண்டு நோய்களிலிருந்து விடுதலை பெற்றார். இயற்கை விவசாயத்தின் மூலம் பெறக்கூடிய நஞ்சில்லா நல்லுணவு நோயாற்றும் பண்புடையது என்பதைத் தன் அனுபவத்தால் புரிந்துகொண்டார். இரண்டாவதாக ரசாயன உரமிட்ட மண்ணில் நுண்ணுயிர்கள் இன்மையால் பூச்சி மருந்தைப் பயன்படுத்தியும் கூட நோய் மீண்டும் தோன்றுகிறது. தன்னைத்தானே காப்பாற்றும் ஆற்றல் இல்லை. ஆனால் மண்ணில் கரிமவிழுது-கரிம உயிர்ச்சத்துள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு நோய்வந்தாலும் தனக்குத்தானே குணமாக்கிக் கொள்ளும் மூன்றாவதாக இயற்கைவழியில் விளைந்த உணவை உட்கொள்ளும் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் நோய் வருவது இல்லை.

இரண்டாவது உலகப்போர் காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தில் வெற்றிவாகை சூடிய லேடி ஈவா பெல்ஃபோர் ”உயிர்மண்” (LIVING SOIL) என்ற நூலையும் வெளியிட்டார். அந்த நூலில் ஆல்பெர்ட் ஹாவொர்ட் மற்றும் மருத்துவர் மெக்கரிசன் ஆகிய இருவரின் ஆதாரப் பூர்வமான வெளிப்பாடுகள் - குறிப்பாக மண்ணுக்கும் மனித ஆயுள், மனித நலவாழ்வு, கால்நடை நலவாழ்வுக்கும் உள்ள தொடர்பு - அதாவது உயிர் மண்ணில் (Humus) விளைந்த உணவின் மருத்துவகுணம், நோயாற்றும் சக்தி எல்லாம் இடம் பெற்றிருந்தன.

ஹாவொர்டுக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் மறக்கமுடியாதவர் ஃபிரண்ட் சைக்ஸ் (Friend Sykes) , ஹோவார்டின் பேச்சால் மிகவும் கவரப்பட்டார். மண்ணின் வலிமை மண்ணில் உள்ள கரிமவிழுதுகள், அதாவது கரிம மக்குப்பொருள்,அதுவே உயிர்மண். மண்ணில் உயிர் உள்ளதால் அந்த உயிர் உள்ளவரை தனக்குத் தானே சத்துக்குறைப்பாட்டை நீக்கிக்கொள்ளும், மண்ணுக்கும் அம்மண்மீது நலம் எழுப்பும் பயிர்களுக்கும் இடையேயான உயிர்ம வேதியியல் மாற்றங்கள் சிறப்பானது ஆகிய இயற்கை விவசாயக் கருத்து வேரைப் புரிந்து கொண்ட ஃபிரண்ட் சைக்ஸ் இவை குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி இருக்கிறார். ஒரு கட்டுரைக்குச் சுட்டியை அடிக்குறிப்பில் [1] காணலாம். இவர் குதிரை வளர்ப்பதில் வல்லவர். ஹோவார்டால் கவரப்பட்டு, ”இந்தூர் ப்ராசஸின்” அனுபவங்களைத் தன் நிலத்தில் பரிசோதிக்க விரும்பினார். ஒன்றுக்கும் உதவாது என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு கரட்டுநிலம் -750 ஏக்கர் பண்ணை வில்ட்ஷைரில் (Wilshine) விலைக்குவந்தது. அது வளமான சாலிஸ்பரி பள்ளத்தாக்கை ஒட்டி 1000அடி உயரத்தில் இருந்தது. அப்படிப்பட்ட நிலத்தை சைகிஸ் வாங்கினார். நிலத்தை வாங்கியபின்னர் தன் நிலத்தில் மண் பரிசோதனை செய்தார். அந்த நிலத்தில் சுண்ணாம்பு+பாஸ்வரம்+பொட்டாசியம் போதுமான அளவில் இல்லை என்று அப்பரிசோதனை தெரிவித்தது. சாதாரணமாக விவசாயம் செய்பவர்கள் மண்ணைப் பரிசோதனை செய்வார்கள். மண்ணில் உள்ள குறைப்பாட்டை நீக்க உப்பு வடிவில் ரசாயன உரம் இடச் செய்வார்கள். இப்படிச் செய்யும் போது மண் மீண்டும் சுரண்டப்படுவதுடன், அதன் சமநிலை இழந்து மீண்டும் புதிய குறைப்பாட்டை ஏற்படுத்தும். மண் பரிசோதனை செய்வது மண்வளத்தை மீட்பதற்கு அல்ல. மண்பாதுகாப்புத் தத்துவத்திற்கு முரணானது. ஃபிரன்ட் சைக்ஸ் என்ன செய்தார்? அம்மண்ணில் பரிசோதனைப்படி கூறப்பட்ட குறைப்பாட்டை அவர் ஏற்கவில்லை. ரசாயன உரம் எதுவும் இடாமல் சற்று அடிமண்ணைப் புரட்டிப்போட்டு உழுது ஓட்ஸ் விதைத்தார். ஏக்கருக்கு 92 புஷல் ஓட்ஸ் அறுத்ததும் அதன் காய்ந்த தாள்களைப் பரப்பி உழுது கோதுமை விதைத்தார். கோதுமையிலும் நல்ல விளைச்சல். பீன்ஸை கோடை உழவு செய்து அம்மண்ணைப் பரிசோதனை செய்தார். இரண்டாவது மண் பரிசோதனையில் அவர் மண்ணில் உள்ள பொட்டாசியக் குறைபாடும், சுண்ணாம்புக் குறைபாடும் நீங்கிவிட்டது. ரசாயனஉரம் இடாமலேயே குறை நீங்கியது எப்படி?


ஃப்ரண்ட் சைக்ஸின் உழவுமுறை

இயற்கை நலம் பற்றிக் கவனம் கொண்டு, என்ன தேவை என்று புரிந்து கொண்டால் போதும். வீண்செலவு வேண்டாம். எனினும் உங்கள் மண்ணில் பொட்டாசியம் குறைபாடு இன்னமும் உள்ளது என்று சைக்சுக்கு இரண்டாம் மண் பரிசோதனை தெரியப்படுத்தியது. கோதுமைப் புற்களை மண்ணில் பரப்பி மீண்டும் கோதுமையையே பயிர் செய்தார். முன்பைவிட அதிகமாகவே கோதுமை விளைந்தது. மூன்றாவது மண் பரிசோதனையில் பொட்டாசியக் குறைபாடும் நீங்கிவிட்டது. மண்ணில் மக்கும் பொருள் ஹாவொர்ட் எடுத்துக்காட்டிய விகிதத்தில் இருந்தால் போதுமானது. அறுவடைக் கழிவும் குதிரைச் சாணமும் உருவாக்கப்பட்ட கம்போஸ்டிங் மண்ணுக்கு வேண்டிய சத்துக்கள் - அதாவது அதிகபட்ச மகசூல் தரும் வழியில் திருத்தம் பெற்று மண்ணைச் சுரண்டாத வழியில் மகசூலும் கிட்டியது மண்ணும் பாதுகாக்கப்பட்டது. இவர் ஒரு வித்தியாசமான உழவுக் கருவியையும் தயார் செய்து அடிமண்ணை மேலே புரட்டும்படி செய்தார். எல்லாநிலத்திலும் ரை, குளோவர் போன்ற தீவனப்பயிர்களை விதைப்பர். ஏக்கருக்கு சுமார் 2 1/2 டன்கள் வரை பசுந்தீவனம் குதிரைகளுக்குக் கிடைத்தது. பலமுறை அறுத்தும் கூட சிம்பு வெடித்து குதிரைகளுக்குத் தேவையான இயற்கைத் தீவனம் கிடைத்தால் குதிரை - பசுக்கள் நோயின்றி உழைப்புத்திறனையும், பாலையும் வழங்கிற்று. முறையே ஓட்ஸ், கோதுமை இரண்டையும் ஒரு பக்க நிலத்தில் மாற்றி மாற்றி விதைத்து 100 புஷல் வரை பெற்றார். அதாவது 1 ஏக்கருக்கு ஏறத்தாழ 3 டன்கள்.

இரண்டாம் உலக்போர் காலக்கட்டத்தில் போர் எவ்வாறு அமைதியைக் கெடுத்ததோ அவ்வாறே விவசாயத்தில் புகுந்த ரசாயனம் மண்ணைச் சுரண்டியதுடன் மனித நலவாழ்வுக்கு உலை வைத்தது. மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் ரசாயன விவசாயம் விஷம்போல் பரவியபோது இந்தியாவிலிருந்தும் கீழை நாடுகளிலிருந்தும் பெற்ற வேளாண்மை நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு ரசாயன விவசாயத்தையும், வீரியரக விதைகளை எதிர்த்தும் ஒரு அறப்போரை ஹோவார்டின் சிஷ்யர்கள் இங்கிலாந்தில் தொடங்கினர். ஈவா பெல்ஃபோர், ”ஹிட்லரைப் போல் ஒரு கொடிய சர்வாதிகாரியை எவ்வாறு எதிர்த்துப் போராட உலகமக்கள் ஒன்று திரடண்டுள்ளனரோ அவ்வாறே இன்று ரசாயனங்களை எதிர்த்து இயற்கையை வாழவைக்க விவசாயிகள் ஒன்று திரளவேண்டிய கட்டாயம் உள்ளது…” என்று கூறினார்.

அப்போது ஹிட்லர் பிரான்சை வென்று முன்னேறிக்கொண்டிருந்தான். ஃபிரண்ட் சைக்சும், ஈவா பெல்ஃபோரும் இன்னும் வேறு பல இயற்கை விவசாயிகளும் மண் மக்கள் குழு என்று (Soil Association) தொடங்கி உலகளாவியதாகப் பல நாடுகளில் உறுப்பினர்களைச் சேர்த்தனர். அது மட்டுமல்ல சஃப்போக்கில் (SUFFOLK) மண்பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு இயற்கை விவசாயிகள் சங்கம் நிலம் ஒதுக்கியது. சமகாலத்தில் இவர்களோடு இணைந்த ஜே.ஐ. ரோடேல் பென்சில்வேனியாவில் அப்போது, நலவாழ்வுக்குரிய நல்வழிகள் என்ற பொருளில் HEALTH FINDER என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டார். நலவாழ்வுக்கும் நல்ல மண்ணுக்கும் உள்ள தொடர்பு பற்றின ஹாவொர்ட் வழங்கிய விவரம் ரோடேலுக்குப் புதுமையாக இருந்தது. ”இதுவரை மண்ணுக்கும் மனிதநலவாழ்வுக்கும் உள்ள நல்லுறவை இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கவில்லை” என்று கூறிய ஜே. ஐ. ரோடேல் முதல் வேலையாக ஹோவார்ட் எழுதியுள்ள ”வேளாண்மை உயில்” என்ற நூலில் அமெரிக்காவில் வெளியிட்டார். நல்ல மண்ணில் இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவில் அதிக அளவு ஊட்டச் சத்து உள்ள உண்மையை ஆய்வுப்பூர்வமாக அவருடைய முக்கியப் பத்திரிகையான ”இயற்கைத் தோட்டம் - பண்ணை”யிலும் வெளியிட்டதுடன், ஈவா பெல்ஃபோரின் அனுபவத்தில் நல்ல மண்ணில் விளைந்த இயற்கை நல்லுணவுக்கு நோயாற்றும் பண்பு உள்ளது என்ற செய்தியால் கவரப்பட்ட டாக்டர் ஜே. நிக்கல்ஸின் இதயநோய் நீங்கியதை முன்னர் கவனித்தோம்.



இதன் பின்னணியில் 1942-இல் ஜே.ஐ.ரோடேல் பென்சில்வேனியாவில் எம்மாவுஸ் (EMMAUS) பண்ணையை வாங்கினார். அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தை ஆழமாக வேர்விட வைத்து மண்ணைக் காப்பாற்றிய பெருமை ஜே. ஐ. ரோடேலுக்கும் அவர் மகன் ஜே. ராபர்ட் ரேடலுக்கும் உண்டு. இவருடைய ”ஹெல்த் ஃபைன்டர்” என்ற கையேட்டுக்குத் தடைவிதிக்கும் அளவுக்கும் ஜே.ஐ ரோடர் பிரபலமானார். ”ஒரு மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ரசாயன விவசாயத்தைத் தவிர்க்க வேண்டும். பாரம்பர்ய விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லாத உணவை நல்ல மண்ணில் விளைவித்து உண்டால் மரணபயம் எதுவுமில்லை.” என்ற கருத்து ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சல் மூட்டியது. யு.எஸ்.பெடரல் டிரேட் கமிஷன் இவர் மீது வழக்குத் தொடர்ந்தது. ரசாயன உணவைப் புறக்கணித்துவிட்டு நலமாக வாழுங்கள் என்று கூறுவது குற்றமா? என்ற கேள்வியுடன் ஜே. ஐ. ரோடேல் இந்த வழக்கை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். இதனால் இவர் நடத்திய பத்திரிகை ”இயற்கைத் தோட்டம் - இயற்கைப் பண்ணை” - அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகி 9 லட்சம் சந்தாதாரர்கள் உருவானார்கள். எனினும் யு.எஸ். ஃபெடரல் கமிஷனை எதிர்த்து வழக்கு நடத்தியதில் இவருடைய நீதிமன்றச் செலவு 4 லட்சம் டாலர். இந்த இழப்புத் தொகையை வழங்க அரசு முன்வரவில்லை. ஏராளமாக நிதி குவிந்தது. நலிவுற்ற பிரிவினர் நலவழ்வு பெறவும் மண்ணைப் போற்றி மண்ணை நஞ்சில்லாமல் காப்பாற்றவும் ரோடேல் தொண்டு நிறுவனம் இன்றளவும் பாடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 1971-இல் ஜே.ஐ. ரோடேல் ஒரு விபத்தில் மரணமுற்றாலும் அவர் புத்திரர் ஜே. ராபர்ட் ரோடேல் தந்தையைவிடத் தீவிரமாக மண்ணைக் காப்பாற்றுவதில் பாடுபட்டார். ரோடேல் நிறுவனம் மண்ணில் உயிர் உண்டு. உயிர் மண் தொடர்பாக நிகழ்ந்த அனைத்து ஆய்வு நூல்களையும் ஷாட்ஸ் உட்பட வெளியிட்டது. ஜப்பான் விஞ்ஞானி மாசநபு ஃபுக்கோக்காவின் ஒற்றை வைக்கோல் புரட்சியைப் பல மொழிகளில் வெளியிட்டார்கள். Reason இன்னமும் இயற்கை விவசாய நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். ஆகவே இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பரப்பியதில் முதல் பெயர் ரேடேல் அன்ட் சன்ஸ் என்பது மிகையில்லை.

மண்ணைப் போற்றிய ஜே.ஐ.ரோடேல் ஆங்கிலமொழியில் மண் என்ற சொல்லுக்கு அழுக்கு, சுத்தமின்மை என்று மண்ணை வெறுக்கத்தக்கதாயுள்ள பொருள் உள்ளதையும் எதிர்த்து மண்ணுக்குப் புதிய பொருள் வழங்கினார். மண் என்பது பல்வகை உயிர்கள் என்னும் தூய்மையுள்ளது என்றும் அர்த்தம் வழங்கினார். மண்ணை நாம் தவறாகப் புரிந்து கொண்டதால் தமிழ் மொழியில் கூட நல்லமண், கெட்டமண் என்று கூறிப் புரியவைக்க வேண்டியுள்ளது. ”நன்னிலம்” என்ற சொல்லாட்சி உள்ளது. ‘நல்லமண்’ என்ற சொல்லாட்சிதான் இனி மண்ணைக் காப்பாற்றும்.

மண் என்று எடுத்துக்கொண்டால், மண்ணின் கீழ் உள்ள உயிரிகளையும் கணக்கிட்டுப் பொருள் கொள்ள வேண்டும் என்பது ரோடேலின் கருத்து.

மண்ணுக்கு அடியில் மண்புழுக்கள் உள்ளன. மண்புழுவை இலத்தீன் மொழியில் ”அன்னலிடா” (ANNELIDA) என்பார்கள். இதன் பொருள் ”வளையங்கள்”. மண்புழுவின் உடல் ஏராளமான வளையங்களைக் கொண்டுள்ளது. சாதாரணமாக ஆப்பிரிக்கா அல்லது இந்தியவகை நாட்டுப்புழுவில் 100முதல் 200 வளையங்கள் உள்ளன. ஒவ்வொரு வளையமும் தனித்து இயங்கும். இந்த வளையங்களின் இயக்கத்தால் மண்ணுக்குள் ஆறு அடி அல்லது ஏழு அடி வரை துளைத்து உள்ளே சென்று கீழ் மண்ணை மேலே புரட்டிக்கொடுக்கும். மண்ணைத் துளைத்துக் கீழ்ப்பகுதிக்குச் சென்றாலும், மீண்டும் மேல் மட்டத்திற்கு வந்தாலும் மண்ணை உட்கொண்டு கழிக்கிறது. இந்தக் கழிவுகளே அருமையான மேல்மண் (TopSoil) இந்த மேல் மண்ணே உற்பத்தியைப் பெருக்கும். ஆகவேதான் அரிஸ்டாடில் மண்புழுவை ”மண்ணின் குடல்கள்” என்று வர்ணிக்கிறார். இவ்வாறு மண்புழுக்களால் மண்ணை வளமாக்க மண்ணில் முக்கிய தொழுஉரம் இட்டு மண்புழுக்கள் அடங்கிய மண்ணைப் பரிசோதித்தால் ஒரு கிராம் மண்ணில் 2.9கோடி நுண்ணுயிரிகள் இருக்கும். இந்த நுண்ணுயிரிகள் மடிவதும் பின்னர் தோன்றிப் பன்மடங்கு விரிவாவதுமாக ஒரு இயக்கத்தை மண்புழுக்கள் செய்யும். மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் கலந்த வேர் மண்ணில் கால்மடங்கு வரை கரிமவேர் விழுதுகள் அதாவது ஹூமஸ் உருவாகிறது. 1டன் மண்புழு மக்கு உரத்தில் 1/4டன் கரிமச்சத்து+ தழைச்சத்துள்ள ஆரோக்கியமான, நல்லுணவு வழங்கக்கூடிய மண் விழுதுகள் உண்டு. இவற்றைப் போற்றி வளர்த்த அரிஸ்டாட்டிலிருந்து ரேடேல் வரை, இயற்கை விவசாயத்திற்காகப் போராடும் இன்றைய விவசாயிகள் வரை மண்ணைப் போற்றும் மாமனிதர்கள் வாழ்ந்து வருவது இந்த உலகம் செய்த தவப்பயன் என்றால் மிகையில்லை.

உலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு

மனிதன் பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை இயற்கையில் தானாகவே விளைந்த விதைகள், கனிகள் ஆகியவற்றை உண்டு வாழ்ந்த நாளிலிருந்து 19ஆம் நூற்றாண்டில் வேதியியல் அல்லது ரசாயனங்கள் கண்டுபிடித்த காலம் வரையில் உலகம் முழுவதும் இயற்கை விஞ்ஞானம் நீடித்து வந்தது. புதிய கற்காலத்தில் வேளாண்மையில் மண்ணைப் பண்படுத்தக் கற்கருவிகளும், மரக்கருவிகளும் பயன்பட்டன. பின்னர் உலோகக் காலம் அதாவது பித்தளை – இரும்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உணவு சேகரிப்பிலிருந்து உணவின் உற்பத்தியும், உணவு உற்பத்தியில் உபரி உணவும் சேர்ந்த பிறகு தொழில் – வணிகம் செழித்து உலக நாகரிகங்கள் அரும்பின. கிரீஸ், ரோம், ஆசியா மைனர் என்று சொல்லப்பட்ட துருக்கி, ஈராக், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புராதன நகரங்கள் தோன்றின. இன்றைய வேளாண்மை சுமார் 10,000 ஆண்டுக்கால வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு 19, 20 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சோதனைகள் வேளாண்மையில் அறிமுகமான ரசாயனங்கள் ஆகும். வேளாண்மை என்றால் அது இயற்கை வழி வேளாண்மை அல்லது பாரம்பரிய வேளாண்மைதான் என்ற இயல்பு மாறி இதில் இரண்டு பிரிவு வந்தது. எவ்வளவுதான் ரசாயனம் வந்தாலும் பாரம்பரிய வேளாண்மையை அதன் இயற்கைத் தன்மையுடன் போற்றிவரும் சிலருடன், ரசாயனத்தைக் கைவிட்டு இயற்கைக்குப் பலர் மாறினாலும் இயற்கை விவசாயம் செய்வோர் சிறுபான்மையினராகவும், ரசாயன விவசாயம் செய்வோர் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல; உலகளாவியதாக உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வாறு பெரும்பான்மையான விவசாயிகள் இயற்கை வழியைக் கைவிட்டது ஏன்? இயற்கை விவசாயத்தில் உற்பத்தி குறைவு, மக்கள் தொகை, பசி – பஞ்சம் என்ற காரணங்களும் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இப்பேச்சுகள் எழுந்தன. எது நிஜம்?


Photo-credit: David Zimmerman

உலகில் மண்ணிலும், விண்ணிலும் ரசாயனத்தை அறிமுகம் செய்யக் காரணமானவர் பேரன் யொஸ்டஸ் வான் லீபெக் (Baron Justus Von Liebig) என்ற ஜெர்மானிய விஞ்ஞானி ஆவார். இவர் 1840இல் “வேளாண்மையிலும் உடற்கூறிலும் ரசாயனத்தின் பயன்பாடு” (Chemistry in its Application to Agriculture and Physiology) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.

பல வகையான உணவுத் தாவரங்களை எரித்துப் பற்பமாக்கி அந்தப் பற்பத்தில் (பஸ்பம்) எஞ்சியுள்ள தாதுப்புகளை அளவிட்டு, ஒரு செடி நன்கு வளரச் செயற்கையில் உற்பத்தி செய்த தாது உப்புகளை நீரில் கரைத்து அல்லது ஈர நிலையில் மண்ணில் இட்டுப் பயிரில் ஏற்றலாம் என்று முன்மொழிந்தார்.

மிகவும் அடிப்படையாகப் பயிருக்கு நைட்ரஜன் என்ற தழைச்சத்து, பாஸ்வரம் என்ற மணிச்சத்து, பொட்டாசியம் என்ற சாம்பல் சத்து மிக அதிக அளவிலும், நுண்ணிய அளவில் கால்சியம், கந்தகம், குளோரின், துத்தநாகம், தாமிரம், வெள்ளீயம், பித்தளை, வெங்கலம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவை தேவை என்று அடுக்கிக்கொண்டு போகலாம். பேரூட்டங்களான நைட்ரஜன், பாஸ்வரம், பொட்டாசியம் கலவையை ஆங்கிலத்தில் சுருக்கமாக, என்.பி.கே (NPK) கலவை என்று ஆங்கிலத்தமிழில் நாம் பேசுவதுண்டு. இந்த என்.பி.கே. கலவையுடன் சிறிது சுண்ணாம்பும் (ஜிப்சம்) சேர்த்து மண்ணில் இட்டுப் பரிசோதித்துப் பார்த்தபோது நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றி எதுவுமே யோசிக்காமல் முக்கியமாக வெடிமருந்து தயாரிக்கும் ரசாயன நிறுவன முதலாளிகள் லீபெக்கைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கொண்டாட்டம் போட்டனர். கண்டமேனிக்கு மண்மேல் ரசாயனங்கள் கொட்டப்பட்டன.

சொல்லப்போனால், லீபெக்கின் கண்டுபிடிப்புகளான சூப்பர் பாஸ்பேட், பென்சீன், ஆல்க்கலி போன்றவை போன்றவை வெடிகுண்டுகளுக்குரிய தாதுப்புகள் ஆகும். போரும் அமைதியும் வெடிஉப்பு உற்பத்தியாளர்களை வாழவைத்தன. போர்க் காலங்களில் வெடிகுண்டு வீசுவதால் லாபம். அமைதிக் காலங்களில் அதையே ரசாயன உரங்களாக மண்ணில் இட்டால் கூடுதல் லாபம். ஆனால், மனிதனின் உடல்நலத்திற்கும், உயிர்ச்சூழலுக்கும், பல்லுயிர் வளங்களுக்கும் நஷ்டம். முதல் உலகப்போருக்கு முன்னும் பின்னுமாக செயற்கையான ரசாயன உரப்பயன் மேலை நாடுகளில் உச்சகட்டத்தை எட்டிப்பிடித்தது.

உலக மக்கள் ரசாயன உரப் பயன்பாட்டால் விளையக்கூடிய தீமைகளை உடனடியாக உணரவில்லை. எனினும், தீர்க்கதரிசிகளாக வாழ்ந்த புகழ்பெற்ற மருத்துவர்களும், மண்ணுயிர் நிபுணர்களும், நுண்ணுயிர் வல்லுனர்களும் லீபெக்கின் சாம்பல் தத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். லீபெக்கின் அடிப்படையான ஆராய்ச்சியில் உயிருள்ள பசுமைத் தாவரத்தை எரித்துக் கிடைத்த சாம்பலில் உள்ள உப்பை மட்டும் கணக்குப் பண்ணும் இவர் செயலுக்கு “சாம்பல் தத்துவம்” என்று பெயரிட்ட அமெரிக்காவில் மிசௌரி பல்கலைக்கழகப் பேராசிரியர் விலியம் அல்பிரைஹ்டை (Dr. William A. Albrecht) வரலாறு மறந்துவிடாது. (1)

“சாம்பல் என்றாலே அது மரணத்தின் அறிகுறி. லீபெக்கின் தத்துவம் மரணத்தின் தத்துவம்” என்று 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் குரல் கொடுத்த அல்பிரைஹ்டை உலகம் மறந்துவிட்டது. மண்ணியல் பற்றி நுண்ணிய ஆய்வுகள் செய்த பல ருஷ்ய விஞ்ஞானிகளும் புறக்கணிக்கப்பட்டனர். ருஷ்ய விஞ்ஞானிகளின் மண்ணியல் ஆய்வுக் கட்டுரைகள் விலைபோகாமல் இருந்தவற்றையெல்லாம் தொகுத்து வெளியிட்ட ஜெரோம்.ஐ.ரோடேல் (Jerome Irving Rodale) பிரிட்டிஷ் இந்தியாவில் பணிபுரிந்த மருத்துவர் மக்காரிசன் (Robert McCarrison), வேளாண் விஞ்ஞானி ஆல்பர்ட் ஹாவார்ட் (Dr. Albert Howard), ஜப்பானிய காந்தி ஃபூகோகா (Masanobu Fukuoka) போன்ற பல நூற்றுக்கணக்கான இயற்கை விவசாய முன்னோடிகள் இந்த சாம்பல் தத்துவம் மண் வளத்தை அழித்துவிடும் என்று எச்சரித்தனர்.

உலகப் போர்களும், உள்நாட்டுப் போர்களும் விளைவித்த பல்வேறு தீமைகளில் வளம் இழந்த வேளாண்மையும் ஒன்று. லீபெக் வளர்த்த என்.பி.கே. என்ற சாம்பல் தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக ருஷ்யாவில் நல்ல விளைச்சலுக்கு ஹ்யூமஸ் (Humus) என்று சொல்லப்படும் மண்ணில் உள்ள மக்குப் பொருள்களே என்ற ஆய்வு முடிவை அங்குள்ள சில விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டனர். அவற்றைப் பின்னர் நாம் கவனிக்கும் முன்பு, மிகவும் தர்க்கரீதியாக லீபெக் தத்துவத்திற்குத் தக்க பதிலை வழங்கியவர் இந்தியாவில் வேளாண்மை ஆய்வுகளை நிகழ்த்திய ஆல்பர்ட் ஹோவார்டே ஆவார்.

ஆல்பர்ட் ஹாவார்ட் (Albert Howard) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல், வேளாண்மை, மண்ணியல், காளானியல் (Mycology) ஆகிய பாடங்களில் தேர்ச்சியுற்ற பேராசிரியர். இவர் மேற்கிந்தியத் தீவில் பார்படோஸ் நகரில் உள்ள இம்பீரியல் டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சரில் ஒரு விரிவுரையாளராக வாழ்வைத் தொடங்கியவர். அங்கு முதலாவதாக லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்த மருத்துவர் மக்காரிசனின் நட்பு கிடைத்தது. ராபர்ட் மக்காரிசன் (Robert McCarrison) புகழ்மிக்க மருத்துவர். இம்பீரியல் இந்திய அரசில் ஊட்டச்சத்து ஆய்வுத்துறைத் தலைவராகவும், நீலகிரி மாவட்டத்தில் கூனூரில் உள்ள லூயி பாஸ்ச்சர் நிறுவனத்தின் தலைவராகவும் முப்பது ஆண்டுக் காலம் பணிபுரிந்ததைப் பாராட்டி பிரிட்டிஷ் மகாராணியிடம் வீரப்பதக்க விருது (Knighthood) பெற்றவர். இவர் சிலகாலம் ஆப்கானிஸ்தானில் ஹுன்சாஸ் பழங்குடி மக்களின் உணவுப் பழக்கவழக்கம், உடற்கூறு பற்றி ஆராய்ந்தவர். ஹுன்சாஸ் பழங்குடிகள் அலெக்சாந்தர் படையெடுப்பின்போது கூடவந்த கிரேக்கப் படைவீரர்கள் மீண்டும் அவருடன் திரும்பாமல் ஆப்கானிஸ்தானில் தங்கி அம்மரபில் வந்தவர்கள். அவர்கள் ஒரு நாளில் 120 மைல் நடக்கக்கூடியவர்கள். 100 வயதுக்குமேல் வாழ்ந்தவர்கள். எந்த வைத்தியமும் செய்துகொள்ளாதவர்கள். குறிப்பாக வயிற்றுநோய், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் ஹுன்சாஸ் மக்களுக்கு வந்தது கிடையாது என்று மக்காரிசனின் மருத்துக் குறிப்பு கூறுகிறது.(2)

“உணவே மருந்து” என்ற குரல் இன்று ஓங்கி ஒலிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல; அன்றைய இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மக்கள் நோய் நொடியில்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்வதற்கான காரணம் பாரம்பரிய உணவு முறை என்பதை மக்காரிசன் பகுத்துரைத்தவர். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “வயிற்றுப் போக்கு, குடல் நோய்களும் தவறான உணவும்” என்ற தலைப்பில் – அதாவது “Faulty Food in Relation to Gastro Intestinal Disorders” – என்ற பொருள் பற்றி பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள உடற்கூறு ஆய்வியல் துறையில் இவர் ஆற்றிய சொற்பொழிவு லீபெக்கின் தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. “வளமான வாழ்வுக்குத் தக்க அளவு ரசாயன ஊட்டங்களை ஏற்க வேண்டும்” என்பது லீபெக்கின் வாதம். ஆனால் சரியான உணவே போதும் என்பது மக்காரிசனின் வாதம். மக்காரிசன் கூறிய அடிப்படையில் இந்தியாவில் வேளாண்மையில் ஆய்வு செய்வதைத் தொடர்ந்தவர் ஹாவர்ட். எனினும், இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் எதுவெனில் இந்தியாவில் மக்காரிசனின் ஆய்வுக் கட்டுரைகளும் அரசாங்க வெளியீடு கோப்புக் குப்பைகளில் புதையுண்டதுபோக, எஞ்சியதிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்கள் குறைவானவை.

மேற்கிந்தியத் தீவில் பணிபுரிந்த ஹாவார்டின் முக்கியப்பணி அந்த நாட்டின் வர்த்தகப் பயிர்களான கரும்பு, கோகோ, ஜாதிக்காய், ஆரவல்லி என்ற ஆரோரூட் (Arrowroot), பட்டாணி, வாழை, எலுமிச்சை ஆகியவற்றின் சாகுபடியை மேம்படுத்துதலாகும். கரும்புப் பயிருக்கு ஏற்படும் பூஞ்சாண நோய் பற்றியும் ஆராய்ந்து மருந்து வழங்குதலும் ஒன்று. அவர் ஆராய்ச்சி செய்ய சோதனைக்கூடம் இருந்தது. ஆனால் சோதனை வயல் / தோட்டம் வழங்கப்படவில்லை. ஆகவே, அவர் நேரிடையாக விவசாயிகளின் வயல்களுக்குச் சென்று கவனித்துத் தக்க யோசனைகளை வழங்கினார். “சோதனைக்கூடங்களில் சோதனைக் குழாய்களுடன் சங்கமமாகிவிட்டால் அறிவு மழுங்கிவிடும் என்றும், நேரிடையாகக் களத்தில் இறங்கி விவசாயிகளின் நுட்பங்களைக் கவனித்தால் அறிவு வளர்ந்துவிடும்” என்பது அவர் கருத்து.

பயிர்களுக்குரிய நோய்க்குறிகள் மண்ணில் புலப்படுவதை ஹாவார்ட் கண்டறிந்தார். தான் செய்யக்கூடிய ஆராய்ச்சிக்கு விரிந்த அளவில் தோட்டமும் வயலும் வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவருக்கு இந்திய வாய்ப்பு வந்தது. இந்திய விவசாயத்தை மேம்படுத்தவும், இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தி உற்பத்தியை உயர்த்தவேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் தகுதி வாய்ந்த விஞ்ஞானி ஒருவரை பிரிட்டிஷ் இந்தியாவில் அன்று வைஸ்ராயாக இருந்த (Viceroy) கர்சான் (Curzon) தேடிக்கொண்டிருந்தார். தில்லிக்கு அருகில் உள்ள புசாவில் 75 ஏக்கர் நிலத்துடன் இணைந்த வேளாண்மை ஆய்வுக்கூடத்தைக் கர்சான் தொடங்குவதாக இருந்தார். 1905இல் இந்த ஆய்வுக்கூடத்தில் தாவரவியல் வல்லுனர் பதவி ஹாவார்டுக்குக் கிடைத்தது. இந்திய விவசாயத்தில் ரசாயனத்தைப் புகுத்தவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு விரும்பியது. ஹாவார்டோ இந்திய விவசாயத்தில் உற்பத்தியை உயர்த்த ரசாயனம் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தியாவிலிருந்துதான் லீபெக்கின் என்.பி.கே. தத்துவத்திற்குத் தர்க்கரீதியாகத் தக்க பதிலை ஹாவார்டு இவ்வாறு வழங்கினார்.

லீபெக்கின் தத்துவத்தில் ஒரு பயிர் விளைந்து நல்ல மகசூல் பெறவேண்டுமானால், நன்கு விளைந்த அதே பயிரைச் சுட்டெரித்துப் பின், அந்தச் சாம்பலில் உள்ள தாதுப்புகளை அளவிட்டு அதை மண்ணில் இட்டால் போதுமானது. இரண்டாவது இயற்கை விவசாயிகள் கூறும் மக்குப்பொருள் என்ற ஹ்யூமஸ் முக்கியம் இல்லை. மக்குப்பொருளில் உள்ள கார்பனை மண் மூலம் பெறவேண்டியதில்லை. பச்சை இலைகள் காற்று வடிவில் உள்ள கார்பனை சுவாசித்து ஏற்பதால் மண்ணில் கரிமம் வேண்டும் என்று காத்திருக்காமல் அப்பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்களை ரசாயன வடிவில் நீரில் கரையக்கூடிய உப்பாக வழங்கவேண்டும் என்று கூறுவதோடு நிற்காமல் ஹ்யூமஸ் மக்குப்பொருள் என்ற கரிமச்சத்து தண்ணீரில் கரையாது என்றும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்கு எஞ்சுகிறது என்ற உண்மையையும் பொய்யென்று லீபெக் வாதிட்டார்.

வேளாண்மை வேதியியல் (Agriculture Chemistry) என்ற துறையில் லீபெக்கின் பங்கைப் பாராட்டிய ஹாவார்ட் முதல் நிலையை ஏற்றுக்கொண்டாலும், இரண்டாவது நிலை மிகவும் தவறு என்று கூறினார். ஒரு தாவரத்திற்குத் தேவையான ஊட்டத்தை உப்பு வடிவில் வழங்கும் செயல் மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் பாதிக்கும் என்று நிரூபித்தார். லீபெக்கைப் பற்றி அன்று ஹாவார்டு கூறிய ஒரு கருத்து இந்தியாவில் ஏட்டுச் சுரக்காய்களாக வாழும் வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. பயிர் வளர்ச்சிக்கு மக்குப்பொருளான ஹ்யூமஸ் தேவையில்லை என்று கூறுவதும், சோதனைக்கூட முடிவே இறுதியான முடிவு என்பதும், உழவியல் நுட்ப அறிவோ, வேளாண்மை அனுபவ அறிவோ லீபெக்கிடம் இல்லை என்று எடுத்துக்காட்டுகிறது என்று ஹாவார்ட் கூறுகிறார். விவசாய வளர்ச்சிக்கு சோதனைக்கூட அறிவு வயலுக்குச் செல்லவேண்டும் என்பதைவிட வயலில் அனுபவ அடிப்படையில் விவசாயிகளின் பாரம்பரிய அறிவு சோதனைக்கூடத்தை அடையவேண்டும் என்பது மிக முக்கியம் என்று ஹாவார்ட் கருதுகிறார். ஒரு தாவரத்திற்கு வேண்டிய அவ்வளவு தாதுப்புச் சத்துகளும் மண்ணில் உண்டு என்றும், உண்மையில் மக்குச்சத்து என்ற ஹுமஸ் மண்ணில் கரைந்து உலோக உப்புச்சத்துகளை நுண்ணிய வழியில் கரைத்து வேர் உறிஞ்சிகளுக்கு எடுத்துக்கொடுக்க நுண்ணியிரிகள் உதவுகின்றன என்பதால், ஹ்யூமஸ் என்ற மக்குப்பொருள் நீரில் கரையாது என்பதும், ஒரு அறுவடைக்குப்பின் மண்ணில் மக்குப்பொருள் எஞ்சாது என்பதும் நிரூபிக்கப்படாதவை என்று கூறும் ஹாவார்ட், அனுபவபூர்வமாக லீபெக்கின் தத்துவத்தையும் பொய்யென்று நிரூபித்துக் காட்டிவிட்டார்.

ஏறத்தாழ 30 ஆண்டுக்காலம் இந்திய விவசாயிகளோடு நெருங்கிப் பழகிய ஹாவார்ட் ஏராளமான பாரம்பரிய உழவியல் நுட்பங்களைப் பயின்று மெருகேற்றி விவசாயிகளுக்குத் திரும்பி வழங்கினார். மக்குப்பொருளில் உள்ள நுண்ணுயிரிகளின் ஆற்றல், மண்ணில் உள்ள உயிரியல் ரசாயனங்கள் குறித்து இவர் முப்பதாண்டுக் காலம் நிகழ்த்திய ஆய்வு முடிவில் இவர் வரைந்த சொல்சித்திரம் “வேளாண்மை உயில்”. இதைப் பற்றியும் 1935க்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் இந்திய உழவியல் நுட்பங்களைக்கொண்டு இயற்கை வேளாண்மைக்கு வித்திட்ட விவரங்களுடன் 1905இலிருந்து 1935 வரை இவர் நிகழ்த்திய ஆய்வுகள் பற்றியும், சமகால் ருஷிய வழங்கல் பற்றியும் இனிவரும் இதழ்களில் கவனிக்கும் முன்பு, லீபெக்கின் பெருந்தன்மை பற்றியும் ஒரு வரி எழுதலாம். “மண்ணில் ரசாயன உரங்களை இடுவது மண் வளத்தைக் கெடுத்துவிடும்’, என்றும், ’பயிர் ஆரோக்கியமாக வளர ஹ்யூமஸ் என்ற மக்கு அவசியமே” என்று லீபெக் ஒரு மரண வாக்குமூலம் வழங்கினாலும்கூட அது காலம் கடந்து வந்து விட்டது. ரசாயன உர உற்பத்தி நிறுவனங்களின் பணப் பசிக்கு மண் இரையானது. இது உலகளாவியதாக இருந்தது.

_____________________________________________________________

1. பேராசிரியர் விலியம் ஆல்ப்ரைஹ்ட் உடைய பல பிரசுரங்களை இந்தப் பக்கங்களில் காணலாம். https://www.earthmentor.com/principles_of_balance/doctor_albrecht_papers/

2. ஹூன்சாஸ் மக்கள் பற்றியும் அவர்களுடைய நீண்ட ஆயுளும் நிரம்பிய ஆரோக்கியமும் நிறைந்த வாழ்வு பற்றிய ஒரு ருசிகரமான வலைத் தளக் கட்டுரையை இங்கே காணலாம். http://thepdi.com/hunza_health_secrets.htm

ஆசிரியர் குறிப்பு: திரு. ஆர். எஸ்.நாராயணன் தமிழ் வாசகர்களில் பலருக்கு நன்கு அறிமுகமானவர். தினமணி செய்தித்தாளில் செறிவான நெடிய பல மையப் பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விவசாயம், தோட்டக்கலை, வேளாண் பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். மைய வேளாண்மை அமைச்சரகத்தின் ஒரு பிரிவில் 31 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக விவசாயம் பற்றிப் பேசும் ஊடக வெளியீடுகளில் இவர் ‘இயற்கை விஞ்ஞானி’ என்று அறியப்படுகிறார். இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள், நாடு காக்கும் நல்ல திட்டம், இயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச் சாகுபடி போன்ற விவசாயம் தொடர்பான புத்தகங்களை எழுதியிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்து அம்பாதுறையில் விவசாயியாக, எழுத்தாளராக,சூழல் மேம்பாட்டுக்கு உழைப்பவராக நன்மையைப் பரப்பியபடி வசித்து வருகிறார்

இயற்கை வேளாண்மை – முக்கிய கோட்பாடுகளும், செயல்பாடுகளும்

இயற்கை வேளாண்மையின் முக்கிய கோட்பாடுகள்

பன்னாட்டு அளவிலான இயற்கை வேளாண்மை இயக்கம் (International federation for organic agriculture movement) இயற்கை வேளாண்மையை, கீழ்க்கண்ட முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்குகிறது.

1. ஆரோக்கியம் பற்றிய கோட்பாடு
இயற்கை வேளாண்மையானது மண், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் நலத்தினை மொத்தமாக கணக்கில் கொண்டு அவற்றை நீடித்த நிலைத்த முறையில் மேம்படுத்தும் வகையில் செயல்படவேண்டும்.

2. உயிர்ச்சூழல் பற்றிய கோட்பாடு
காணப்படும் உயிர்ச்சூழல் நிலைகளின் முறைகள் மற்றும் சுழற்சிக்கேற்ப இயற்கை வேளாண்மை இயைந்து செயல்பட்டு, சுற்றுப்புறசூழலின் வாழ்வியலுக்கு உதவிட வேண்டும்

3. நடுநிலையாக செயல்படுதல் பற்றிய கோட்பாடு
வாழ்வியல் வாய்ப்புகளுக்கேற்பவும், பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் அவற்றுடன் இயற்கை வேளாண்மை உறவுகளை ஏற்படுத்தி நடுநிலையாக செயல்படவேண்டும்.

4. பராமரிப்பு பற்றிய கோட்பாடு
தற்பொழுது வாழும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும், சுற்றுப்புற சூழலுக்கும் ஏற்றவாறு இயற்கை வேளாண்மை கவனமான மற்றும் பொறுப்பான முறையில் செயல்படவேண்டும்.

மேற்கூறப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் ஒருசேர கடைபிடிக்கப்படவேண்டும்.

இயற்கை வேளாண்மையின் முக்கியமான குணங்கள்
ஒரு பகுதியில் கிடைக்கும் புதுப்பிக்கவல்ல மூலாதாரங்களை உபயோகப்படுத்துதல்
உயிராதாரங்களின் உற்பத்தித் திறன் மற்றும் சூரிய ஒளியினை முறையாகப் பயன்படுத்துதல்
மண்ணின் வளத்தினை பராமரித்தல்
தாவர மற்றும் கரிம சத்துகளை அதிகபட்சமாக மறுசுழற்சி செய்தல்
இயற்கைக்கு மாறான பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ உபயோகப்படுத்தாமல் இருத்தல் (உதாரணமாக வேதியில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்)
விவசாய நில உபயோகம் மற்றும் உற்பத்தி முறையில் பல்லுயிர் பெருக்க முறைகளை உபயோகித்தல்
பண்ணை விலங்குகளை அவற்றின் சுற்றுப்புற வேலைகளுக்கேற்ப அவற்றினை பராமரித்தல் மற்றும் அவற்றின் இயற்கையான குணநலன்களை அனுமதித்தல்
இயற்கை வேளாண்மையானது சுற்றுப்புற சூழ்நிலையுடன் இயைந்த உற்பத்தி முறையாகும். இம்முறை வேளாண்மையானது சிறிய விவசாயிகளுக்கு அதிக நன்மைகளை தரவல்லது. இயற்கை வேளாண்மை மூலம் வறுமையினை ஒழிக்கவும், உணவுப்பாதுகாப்பினையும் கீழ்க்கண்ட செயல்முறைகளின் மூலம் உதவுகிறது.

குறைந்த வேளாண் இடுபொருள் உபயோகப்படுத்தும் இடங்களில் விளைச்சலை அதிகப்படுத்துதல்
புவியில் வாழும் பல்வேறு உயிர்களை பாதுகாக்கவும், பண்ணையிலுள்ள மற்றும் அதனை சுற்றியுள்ள இயற்கை மூலாதாரங்களை பாதுகாத்தல்
உற்பத்தி செலவினை குறைத்து வருமானத்தினை அதிகப்படுத்துதல்
பாதுகாப்பான, பல்வேறு விதமான உணவுகளை உற்பத்தி செய்தல்
நீண்ட நாட்களுக்கு வேளாண் உற்பத்தியினை பராமரித்தல்


இயற்கை மேலாண்மை- ஒரு ஒருங்கிணைந்த செயல்முறை
தத்துவம்

இயற்கை வேளாண்மை பண்ணையிலுள்ள அனைத்து உற்பத்தி முறைகளும் ஒன்றோடொன்று இணைத்து, ஒரு உற்பத்தி முறைக்கு மற்ற உற்பத்தி முறை உதவும் வகையில் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த முறையாகும்.
பயிர்களின் சத்தின் ஆதாரமாகவும், பல்வேறுபட்ட உயிராதாரங்களின் மூலம் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், சுழல் முறையில் பயிரிடுதல், பல்வேறு பயிர்களை ஒருசேர பயிரிடுவதன் மூலம் மண்ணின் வளத்தினை பாதுகாத்தல், மாடுகளின் மூலம் பண்ணையிலுள்ள ஆதாரங்கள் மேலாண்மை மற்றும் உற்பத்தியினை அதிகப்படுத்துதல் போன்ற அனைத்திற்கும் நலமான உயிர் ஓட்டமுள்ள மண் அவசியம்.
இயற்கை முறை மேலாண்மையின் மூலம் தேவைக்கு அதிகமாக மூலாதாரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை ஏற்படுத்தாமல், தேவைக்கேற்ப மூலதாரங்களை உபயோகித்து உற்பத்தியினை பெருக்குவதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை மூலாதாரங்களை சேமித்து வைத்தல்


முக்கியமான படிகள்
மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வெப்பநிலையினை மேலாண்மை செய்தல்
மழைநீரை சேமித்தல்
சூரிய ஆற்றலை அதிகபட்சமாக சேமித்தல்
இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு
இயற்கை சுழற்சி முறைகள் மற்றும் உயிர்வாழ் முறைகளை பராமரித்தல்
விலங்குகளை ஒருங்கிணைத்தல்
புதுப்பிக்கவல்ல ஆற்றல்களை அதிகமாக சார்ந்திருத்தல் (உதாரணமாக விலங்கின ஆற்றல்)


எப்படி அடைவது
1. மண்வளத்தினை அதிகப்படுத்துதல்
வேதியியல் பொருட்களை வேளாண் உற்பத்திக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல், பயிர் உப பொருட்களை உபயோகப்படுத்துதல், கரிம மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்துதல், பயிற்சுழற்சி முறை மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிடுதல், அதிகமாக மண்ணினை தோண்டாமல், மண்ணின் மீது பசுந்தாழ் உரங்கள் மற்றும் உயிர் பொருட்களை இடுதல்

2. வெப்பநிலை மேலாண்மை செய்தல்
மண்ணின் மீது பசுந்தாழ் உரங்களை போட்டு மூடி வைத்தல் மற்றும் வரப்புகளில் மரங்கள் மற்றும் புதர் வகை தாவரங்களை நடுதல்

3. மண் மற்றும் மழைநீரினை சேகரித்தல்
மழைநீரினை சேகரிக்க சேகரிப்பு தொட்டிகளை கட்டுதல், சரிவான நிலங்களில் மழை நீரினை சேகரிக்க வரப்பு போன்ற அமைப்புகளை நிறுவதல், சரிவான இடங்களில் வரிசையாக மரங்களை நடுதல், பண்ணைக்குட்டைகளை தோண்டுதல், குறைந்த உயரமுடைய செடிகளை வரப்புகளில் நடுதல்

4. சூரிய ஆற்றலை சேகரித்தல்
பல்வேறு வகை பயிர்களை நடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமையினை வயல்களில் பராமரித்தல்

5. இடுபொருட்கள் தேவை பூர்த்தி செயவதில் தன்னிறைவு

உற்பத்தி செய்த விதைகளை உபயோகித்தல், பண்ணையிலேயே உரத்தினை உற்பத்தி செய்தல், மண்புழு உரம், திரவ உரம், தாவர கழிவுகளை உபயோகித்தல்

6. உயிராதாரங்களை பராமரித்தல்
உயிரினங்கள் வாழ்வதற்கு போதுமான, தகுந்த வாழ்விடங்களை உருவாக்குதல், பூச்சிக்கொல்லிகளை எப்பொழுதும் உபயோகிக்காமல் இருத்தல், பல்வேறு பட்ட உயிரனங்களை பெருக்குதல்

7. விலங்குகளை ஒருங்கிணைத்தல்
இயற்கை வேளாண்மையின் மிக முக்கியமான அம்சம் கால்நடைகளாகும். இவை அவற்றின் உற்பத்தி பொருட்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சாணம், மற்றும் சிறுநீர் போன்ற மண் உரங்களையும் அளிக்கின்றன.

8. புதுப்பிக்கவல்ல ஆற்றலை உபயோகித்தல்
சூரிய ஆற்றல், சாண எரிவாயு, காளைகளின் மூலம் நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர் மற்ற இதர இயந்திரங்களை உபயோகித்தல்.



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்



இயற்கை வேளாண் பண்ணையினை உருவாக்குதல்
இயற்கை முறை வேளாண்மை மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த முறையாகும். சில இயற்கை வேளாண்மை வழி முறைகளை பின்பற்றினால் மட்டும் குறிப்பிடத்தக்க விளைச்சலை பெற இயலாது. வேளாண் உற்பத்தியினை அதிகரிக்க தேவையான எல்லா அம்சங்களும் முறையாக செயல்படுத்தப்படவேண்டும். இந்த வழிமுறைகளாவன. 1.வாழ்விடத்தினை உருவாக்குதல் 2. வேளாண் இடுபொருட்களை தயாரிக்க பண்ணையில் வசதிகளை ஏற்படுத்திடல் 3. பயிற்சுழற்சி மற்றும் பல பயிர் சாகுபடிக்கு திட்டமிடுதல் 4. 3-4 வருட அளவிலான பயிற்சுழற்சி முறை 5. புவி அமைப்பு, மண், சீதோஷ்ண நிலைக்கேற்றவாறு பயிரிடுதல்
i. உள்கட்டமைப்பு
பண்ணையில் 3-5% சதவிகித இடத்தினை, மாடுகள், மண்புழு உரத்தயாரிப்பு, உர உற்பத்தி கிடங்கு, போன்றவற்றிற்கேற்றவாறு ஒதுக்கிடவேண்டும்
மழைநீரினை சேமிக்க, 7X3X3 மீட்டர் அளவிற்கு குழிகளை வெட்டி மழைநீரினை சேகரிக்க வேண்டும். இவ்வாறான குழிகளை ஒரு ஹெக்டேருக்கு ஒரு குழி என்ற விகிதத்தில் சறுக்கலாக அதிக மழைநீர் சேகரிக்கும் இடங்களில் தோண்டவும்.
முடியுமானால், 20 மீட்டருக்கு 10 மீட்டர் என்ற அளவிலான பண்ணைக்குட்டையினை நிறுவலாம்
திரவ உரத்தினை தயாரிக்க ஒரு ஏக்கருக்கு ஒரு 200 லிட்டர் கொள்ளளவு உள்ள தொட்டியினை நிறுவ வேண்டும். மற்றும் சில தொட்டிகள் தாவர கழிவுகளை போடுவதற்கும் நிறுவ வேண்டும்.
5 ஏக்கர் அளவுள்ள நிலத்திற்கு 1-2 மண்புழு தயாரிப்பு படுக்கைகள், NADEP கம்போஸ்ட் தொட்டி, 2-3 உரத்தொட்டிகள் போன்றவற்றை நிறுவ வேண்டும்.
இவ்விடங்களில், தண்ணீர் பாய்ச்ச கிணறு மற்றும் பம்ப் போன்றவற்றையும் நிறுவலாம்.


ii. வாழ்விடம்
கிளைரிசிடியா, மர அகத்தி, சுபாபுல், கேசியா டோரா மற்றும் இதர மண்ணில் உயிர் நைட்ரஜன் தக்க செய்யும் மரங்களை வரப்புகளில் நடவ வேண்டும் (5 ஏக்கர் நில அளவுள்ள பண்ணைக்கு, 1.5 மீட்டர் அகலத்திற்கு, 800-1000மீ நீலம் அளவுக்கு மர வளர்ப்பு தேவை)
சில இடங்களில் கீழ்க்கண்ட மரங்கள் அல்லது புதர்செடிகளை நட வேண்டும். எடுத்துக்காட்டாக, வேம்பு -3-4 மரங்கள், புளிய மரம் –ஒன்று, அத்தி மரம் 1-2, இலந்தை புதர்கள் 8-10, நெல்லி -1-2, சீதாப்பழ மரம் அல்லது முருங்கை 2-3 மற்றும் 2-3 பழ மரங்கள்
கிளைரிசிடியா மர வரிசைகளுக்கு இடையில் பூச்சிக்கொல்லித்திறன் வாய்ந்த அடொதோடா, நொச்சி, எருக்கு, நெய்வேலி காட்டமணி, ஊமத்தை போன்ற தாவரங்களை நடவும்.
பொது உபயோக இடத்திலுள்ள மரங்களை முழுவதும் வளர்வதற்கு அனுமதிக்கவேண்டும். பண்ணை வரப்பிலுள்ள மரங்களையும், புதர் செடிகளையும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு நடுதல் வேண்டும். பின்பு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை வெட்டிவிட வேண்டும்.
கிளைரிசிடியா மரக்கன்றுகளை பெரிய வரப்புகளில் நெருக்கமாக பண்ணையினை சுற்றிலும் நடவேண்டும். இவை உயிர் வேலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணில் நைட்ரஜன் சத்தினை நிலைநிறுத்தவும் பயன்படுகின்றன.
400 மீட்டர் நீளமுள்ள கிளைரிசிடியா செடிகள், மானாவாரி சூழ்நிலையில், நட்ட மூன்றாம் வருடத்திற்கு பின்பு ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 22.5 கிலோ நைட்ரஜனை ஒரு வருடத்திற்கு தரவல்லது. நட்ட 7 வருடத்திற்கு பின்பு, ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 77 கிலோ நைட்ரஜனைத் தரவல்லவை. நீர்பாய்ச்சும் நிலங்களில் இந்த நைட்ரஜன் அளவு 75-100 சதவிகிதம் அதிகரிக்கும். நீர் பாய்ச்சும் தருணங்களில் வருடத்திற்கு 3-4 முறையும், நீர் பாய்ச்சாத தருணங்களில் 2 முறையும் அறுவடை செய்யலாம். கிளைரிசிடியா செடிகளை 5.5 அடி உயரத்திற்கு மேல் வளரவிடக் கூடாது, ஏனெனில் இந்த உயரத்திற்கு மேல் அவை வளர்ந்தால் நிலத்தில் நிழல் அதிகம் விழும். இதன் இலைகளை பசுந்தாழ் இலை உரமாக பயன்படுத்தலாம் இவற்றை அறுவடை செய்து மண்ணுடன் கலந்து விதை விதைப்பதற்கு முன்பு உரமாக பயன்படுத்தலாம்


10 ஏக்கர் அளவிலான இயற்கை வேளாண்மை பண்ணையின் வரைபடம்



இயற்கை வேளாண்மைக்கு மண்ணை தயாரித்தல்
அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை

அ. குறைந்த இடுபொருளுக்கான மாற்று வழிமுறை (Low input alternative)

முதல் வருடத்தில், ஒரே சமயத்தில் பல்வேறு வயதுடைய பயறு வகை பயிர்களை - அதாவது, முதல் 60 நாட்கள் பயிர், பின் 90-120 நாட்கள் பயிர், பின்பு 120 நாட்கள் பயிர் ஆகியவற்றை, வரிசையாக பயிரிடலாம். தானியங்களை/பச்சை காய்களை உருவி எடுத்து விட்டு, பின் எல்லா செடிகளையும் களைச்செடிகளுடன் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
இரண்டாம் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 2.5 டன் என்ற விகிதத்தில் இயற்கை உரத்தினை நிலத்தில் இடவும். பின்பு தானியங்களுடன் பயறு வகைகளையும் ஒன்றாக, ஊடுபயிர் அல்லது தொடர் பயிராகவோ பயிரிடலாம். அறுவடைக்குப்பின் இந்த செடிகளை பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்த வேண்டும்
தண்ணீர் பாய்ச்சும் வசதிகள் இருந்தால் வெயில் காலத்தில் வளரும் பயறு வகை பயிரினை, காய்கறிகளுடன் சேர்த்து பயரிடலாம். அறுவடைக்கு பின்பு இந்த இரண்டு செடிகளையும் சேர்த்து பசுந்தாழ் உரமாகப் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பயிரிடும் தருணத்திலும் திரவ உரத்தினை வயல்களில் 3-4 முறை இடவும்
ஆ. அதிக இடுபொருளுக்கான மாற்று முறை

மண்ணில் 2.5 டன் தொழுஉரம் அல்லது மண்புழு உரம், 500 கிலோ எண்ணெய் பிண்ணாக்கு, 500 கிலோ ராக் பாஸ்பேட், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் போன்றவற்றை இடவும்
3-4 வகையான வேறுபட்ட பயிர்களை வரிசையாக விதைக்கவும். இதில் 40 சதவிகிதம் பயறு வகைகளாக இருக்கவேண்டும். அறுவடைக்குப்பின் அடுத்த விதைப்புக்கு முன் எல்லா செடிகளையும் பசுந்தாழ் உரமாக பயன்படுத்தவும். இரண்டாம் விதைப்பு பருவத்திலும் இதே போன்று உரங்களைப் பயன்படுத்தவும்
திரவ உரத்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவுக்கு 3-4 முறை பயிரிடும் தருணத்தில் நீருடன் கலந்து வயல்களுக்குப் பாய்ச்சவும்.
12-18 மாதங்களுக்குப் பிறகு இந்த மண் இயற்கை முறை வேளாண்மைக்கு எந்த பயிர்களையும் இணைத்து பயிரிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அடுத்த 2-3 வருடங்களுக்கு எந்த பயிரிடுடனும் பயறு வகைப் பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது இணைப்பயிராகவோ பயிரிடலாம். பயறு வகைப் பயிர்களுக்கு குறைந்தது 30 சதவிகிதம் வரை பயிர்க்கழிவுகளாக இருக்கமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இப்பயிர்க்கழிவுகளுடன் திரவ உரத்தினை சேர்த்து அடி உரமாக மண்ணில் இடலாம்.



iv. பலவகையான பயிர்களை பயிரிடுதல் அல்லது சுழற்சி முறையில் பயிரிடுதல்
இயற்கை முறை வேளாண்மையில், ஒரு தனிப்பட்ட பயிர் பயிரிடும் முறை பயன்படுத்தப்படமாட்டாது.
முழுப்பண்ணையிலும் 8-10 பயிர்கள் எல்லா சமயத்திலும் கண்டிப்பாக பயிரிடப்பட்டிருக்கவேண்டும்
ஒவ்வொரு வயலிலும் குறைந்தது 2-4 வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கவேண்டும். அவற்றுள் ஒன்று கட்டாயாமாக பயறு வகை தாவரமாக இருக்கவேண்டும்
சில சமயத்தில் ஒரு வயலில் ஒரு விதமான பயிர் மட்டுமே பயிரிடப்பட்டு இருப்பின், அடுத்த வயலில் வெவ்வேறு விதமான பயிர்களை பயிரிடவேண்டும்
மூன்று அல்லது நான்கு வருட பயிற்சுழற்சி முறையினை பின்பற்ற வேண்டும்
அதிக சத்துகள் தேவைப்படும் தாவரத்திற்கு முதலில் பயிரிட்டு பின்பு பயறு வகை பயிர்களை பயிரிடவேண்டும்.
பல்வேறு விதமான தாவரங்களைப் பயிரிடுவதற்கும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும், 50-150 காய்கறி செடிகளை தோராயமாக வீட்டு உபயோகத்திற்காகவும், கேந்தி எனப்படும் துளுக்க சாமந் தி செடிகளை நூறு செடிகள் ஒரு ஏக்கருக்கு என்ற விகிதத்திலும் பயிரடவேண்டும்.
பயறு வகை மற்றும் காய்கறி பயிர்களுடன் அதிக சத்துகள் தேவைப்படும் கரும்பு போன்ற பயிர்களையும் போதுமான உற்பத்திக்கு பயன்படுத்தலாம்.


v. 5. உயிருள்ள அதிக சத்து மிகுந்த இயற்கை மண்
வளமுள்ள, உயிர்ச்சத்து மிகுந்த மண்ணில் கரிம கார்பனின் அளவு, குறைந்தது 0.8-1.5% சதவிகிதம் இருக்கவேண்டும்
நுண்ணிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்ளின் உபயோகத்திற்காக எந்த சமயத்திலும் போதுமான அளவு உலர்ந்த, பாதி மக்கிய அல்லது முழுவதும் மக்கிய கரிமபொருள் மண்ணில் இருக்கவேண்டும்
ஒரு கிராம் மண்ணில் 1 x 108 என்ற எண்ணிக்கையில் நுண்ணுயிர்களான பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஆக்டினோமைசிட்டிஸ் போன்றவை கட்டாயமாக இருக்கவேண்டும்
சிறிய உயிரனங்களும், பூச்சிகளும், எறும்புகளும் கட்டாயமாக போதுமான எண்ணிக்கையில் இருக்கவேண்டும்


vi. மண்ணில் உரமிடுதல் மற்றும் மண்ணை வளப்படுத்துதல்
கிளைரிசிடியா மற்றும் இதர வரப்புகளில் வளர்த்தப்பட்ட மரங்களின் கிளைகள், பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தொழுஉரம், மண்புழு உரம், சாணம் மற்றும் சிறுநீர், பயிர்க்கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி மண்ணின் சத்தினை அதிகப்படுத்தலாம்
உயிர்உரங்கள் மற்றும் அடர்த்தியான உரங்களான தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்குகள், கோழி எரு, காய்கறிகழிவுகள், மற்ற இதர தயாரிக்கப்பட்ட உரங்களை தகுந்த விகிதத்தில் கலந்து போதுமான அளவுகளில் உபயோகிக்கவேண்டும்
அதிக அளவிலான தொழுஉரத்தினை உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்
பயிற்சுழற்சி முறையினை மாற்றியமைத்தல், பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுதல் போன்ற யுக்திகளைப் பயன்படுத்தி இடுபொருட்களை நன்றாக உபயோகப்படுத்தவேண்டும்
பயிரின் வகை மற்றும் பயிருக்குத் தேவைப்படும் சத்துகளின் தேவைக்கேற்ப பண்ணையின் வெளியில் இருந்து வாங்கி உபயோகப்படுத்தப்படும் இடுபொருட்களின் தேவையினை அறியலாம்
மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மற்றும் இதர உயிர்ப்பொருட்களின் செயல்திறனை பராமரிக்க திரவ உரங்களை மண்ணில் இடுவது அவசியமாகும். எல்லா விதமான பயிர்களுக்கும் 3-4 முறை திரவ உரத்தினை இடலாம்
மண்புழு உரம், கம்போஸ்ட் டீ, மாட்டின் சிறுநீர் போன்றவை தெளிப்பாக உபயோகப்படுத்தப்படும் போது பயிர்களின் வளர்ச்சியினை அதிகரிக்கும் தன்மையுடையவை. பயிரினை விதைத்து 25-30 நாட்கள் கழித்து 3-5 முறை இவற்றை தெளிப்பதால் பயிர் உற்பத்தி அதிகரிக்கும்.
வெரிமிவாஷ், பசுமாட்டு சிறுநீர் மற்றும் இயற்கை எருக்களின் கரைசல் ஆகியவை மண்ணின் உயிரினங்கள் வளர பெரிதும் உதவுகிறது. விதைத்த 25 - 30 நாட்கள் கழித்து, 3-5 முறை இவற்றை தெளித்தல் அதிக விளைச்சலை கொடுக்கும்.
இயற்கை முறை வேளாண் மேலாண்மை ஒரு ஒருங்கிணைந்த செயல் முறையாகும். எல்லா அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்ட, தனியாக செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரு தனிப்பயிர் ஒரு சமயத்தில் வளர்க்கப்படாததால், ஒரு பயிருக்கான சத்து மேலாண்மையினை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாகும். சத்து மேலாண்மை முறையின் ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தானிய மற்றும் பயறுவகை பயிர்களை ஒன்றாக பயிரிடல்

ஆடி பருவத்தில் சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் அல்லது பருத்தி போன்றவற்றை பயறு வகைகளுடன் சேர்த்து பயிரிடலாம். தானிய வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 60 சதவிகித இடத்தையும், பயறு வகை செடிகள் மொத்த பயிரிடும் இடத்தில் 40 சதவிகித இடத்திலும் வரிசையாக பயிர் செய்யப்படவேண்டும். இந்நிலத்தில் 1.5-2 டன் தொழுஉரம், 500 கிலோ மண்புழு உரம், 100 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒன்றாக கலந்து அடியுரமாக இடவேண்டும். உயிர் உரங்கள் விதை மற்றும் மண் நேர்த்திக்கு பயன்படுத்தலாம். முன்பு பயிர் செய்யப்பட்ட பயிர்களின் கழிவுகளை திரவ உரத்துடன் சேர்த்து மண்ணின் மேற்பரப்பு முழுவதும் விதைப்புக்கு பின் உடனே இடவேண்டும். களைகளை கையால் எடுக்கவேண்டும். களைகளையும் உரமாக பயன்படுத்திடலாம். 200 லிட்டர் திரவ உரத்தினை ஒரு ஏக்கர் என்ற விகிதத்தில் 3-4 முறை நீர் பாய்ச்சும்போது கலந்து உபயோகிக்கலாம் அல்லது ஒரு ஏக்கர் நிலம் முழுவதிலும் சமமாக மழை பெய்யும்போது தெளிக்கவேண்டும். உயிர் டைனமிக் தயாரிப்புகளான மண் சாண குழி அல்லது இ.எம் தயாரிப்புகள் போன்றவற்றையும் தொழு உரத்திற்கு பதிலாக உபயோகிக்கலாம். மண்புழு உர திரவ கழிவு அல்லது மாட்டின் சிறுநீர் போன்றவற்றை அல்லது இவை இரண்டும் 1:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை 2-3 முறை தெளிப்பதால் பயிர் உற்பத்தியினை அதிகரிக்கலாம்.

மார்கழி பட்டத்தில், முதலில் வேகமாக வளரக்கூடிய கீரை வகைகளான பசலைக்கீரை அல்லது பாலக்கீரை போன்றவற்றை பயிரிட்டு பின், தானிய வகை பயிரினை பயிரடலாம். காய்கறிகளையும், பயறு வகைகளுடன் சேர்ந்து பயிர் செய்யலாம். தானிய பயிருக்கேற்றவாரு உரங்களை இந்தப்பருவத்திலும் உபயோகப்படுத்தலாம். காய்கறி பயிர்களுக்கு 500 கிலோ தூளாக்கப்பட்ட எண்ணெய் பிண்ணாக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 கிலோ ராக் பாஸ்பேட் போன்றவற்றை ஒரு ஏக்கர் நிலத்திற்கு உரமாக உபயோகப்படுத்தலாம். மண் நன்றாக உரமேற்றப்பட்டபின், இயற்கை வேளாண்மை முறை பின்பற்ற ஆரம்பித்து 3-4 ஆண்டுகளுக்குப் பின்பு உபயோகிக்கும் உரங்களின் அளவினை 50 சதவிகிதமாக குறைத்துக்கொள்ளலாம்.



vii. விதை நேர்த்தி
இயற்கை முறை மேலாண்மையில், கட்டுப்பாடு முறைகள் அதிக பிரச்சனைகள் காணப்படும் போது மட்டுமே கையாளவேண்டும். நோயில்லாத விதையினையும், நோய் எதிர்ப்பு ரகங்களையும் உபயோகிப்பது சாலச்சிறந்தது. விதை நேர்த்தி செய்ய ஒரு தரமான முறை தற்பொழுது இல்லை. எனவே விவசாயிகள் பல்வேறு முறைளை உபயோகிக்கலாம். அத்தகைய முதன்மையான விவசாயிகள் கண்டுபிடித்த விதை நேர்த்தி முறைகள் கீழ்வருமாறு.

530 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையுள்ள நீரில் விதைகளை 20-30 நிமிடங்களுக்கு ஊறவைத்தல்
மாட்டின் சிறுநீர் அல்லது மாட்டின் சிறுநீர் மற்றும் கரையான் புற்று மண் கலந்த பசையினை விதையுடன் கலத்தல்
பீஜாஅம்ருத் கரைசல் - 50 கிராம் மாட்டு சாணம், 50 மிலி மாட்டு சிறுநீர், 10 மிலி பால், 2-3 கிராம் நீர்த்த சுண்ணாம்பு போன்றவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் (பீஜ்ராநட்) கலந்து விதைகளை அதை 12 மணிநேரம் வைத்திருத்தல்
250 கிராம் பெருங்காயத்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 கிலோ விதை நேர்த்தி செய்யலாம்.
மஞ்சள் தூள், மாட்டு சிறுநீருடன் கலத்தல்
பஞ்சகாவிய சாறு
டிரைக்கோடெர்மா விரிடி (4 மில்லி கிராம் ஒரு கிலோ விதைக்கு) அல்லது சூடோமோனாஸ் புளோரோஸன்ஸ் (10 கிராம் ஒரு கிலோ விதைக்கு)
உயிர் உரங்கள் (ரைசோபியம் அல்லது அசோபாக்டர் +பிஎஸ்பி)


viii. திரவ உரத்தினை தயாரித்தல்
பல விதமான திரவ உரங்கள் பல மாநிலங்களிலுள்ள விவசாயிகளால் தயாரிக்கப்படுகின்றன. சில முக்கியமான பரவலாக உபயோகப்படுத்தப்படும் திரவ உரத்தயாரிப்பு முறைகள் பின்வருமாறு

சஞ்சீவாக்
நூறு கிலோ மாட்டு சாணத்துடன், 100 லிட்டர் மாட்டு சிறுநீர், 500 கிராம் வெல்லம் போன்றவற்றை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு 500 லிட்டர் மூடப்பட்ட டிரம்மில் ஊற்றிவைக்கவும். இதனை 10 நாட்களுக்கு நொதிக்கவைக்கவும். இதனுடன் 20 மடங்கு தண்ணீர் கலந்து அதனை ஒரு ஏக்கர் மண்ணில் தெளிக்கலாம் அல்லது நிலத்திற்கு பாய்ச்சும் நீரில் கலந்து வயல்களுக்கு பாய்ச்சலாம்.

ஜீவாம்ருதம்
பத்து கிலோ மாட்டு சாணத்துடன் 10 கிலோ மாட்டு சிறுநீர், 2 கிலோ வெல்லம் எதாவது ஒரு தானியத்தின் மாவு 2 கிலோ, உயிர் மண் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரைக் கலந்து இதனை 5-7 நாட்களுக்கு நொதிக்கவிடவும். இந்த நாட்களில் இக்கரைசலை ஒரு நாளைக்கு 3 முறை கலக்கி விடவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு நீருடன் கலந்து பாய்ச்சலாம்.

பஞ்சகாவ்யா
சாண எரிவாயு கழிவு 4 கிலோ, புதிய மாட்டு சாணம் 1 கிலோ , மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுபால் 2 லிட்டர், மாட்டு தயிர் 2 லிட்டர், மாட்டு நெய் 1கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலக்கி 7 நாட்களுக்கு நொதிக்கவைக்கவேண்டும். இந்த ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இக்கரைசலை கலக்கி விடவேண்டும். 3 லிட்டர் பஞ்சகாவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் தெளிக்கவும். ஒரு ஏக்கர் மண்ணில் தெளிப்பதற்கு அல்லது நீருடன் பாய்ச்சுவதற்கு 20 லிட்டர் பஞ்சகாவ்யா தேவை.

ஊட்டமேற்றிய பஞ்சகாவ்யா
ஒரு கிலோ புதிய மாட்டு சாணத்துடன், மாட்டு சிறுநீர் 3 லிட்டர், மாட்டுப்பால் 2 லிட்டரும், தயிர் 2 லிட்டரும், நெய் ஒரு கிலோவும், கரும்புச்சாறு 3 லிட்டர், தேங்காய் தண்ணீர் 3 லிட்டர், மசித்த வாழைப்பழம் 12 கலந்த கலவையினை 7 நாட்களுக்கு நொதிக்க விடவும். மேற்கூறிய பஞ்சகாவ்யா கரைசலை நிலத்திற்கு பாய்ச்சுவது போலவே இதனையும் உபயோகிக்கவும்.



ix. பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் மேலாண்மை
இயற்கை வேளாண் பண்ணை மேலாண்மையில் வேதியியல் பொருட்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்தலாம்.

உழவியல் முறை
இயந்திரவியல் முறை
உயிரியல் முறை
இயற்கை முறையில் ஒத்துக்கொள்ளப்பட்ட வேதியியல் மாற்றுப்பொருட்களை உபயோகிப்பது
உழவியல் முறை
நோயற்ற விதைகளை உபயோகித்தல் அல்லது நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த பயிரினங்களை உபயோகிப்பது, இயற்கை வேளாண் முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தும் மேலாண்மை முறையாகும். பண்ணையில் பல்வேறு உயிரினத்தன்மையினை பராமரித்தல், முறையான பயிற்சுழற்சி முறை, பல்வேறு பயிர்களை பயிரிடுதல், வாழ்விடங்களை மாற்றியமைத்தல், பூச்சிகளை பிடிக்கும் பொறிப் பயிர்களை உபயோகித்தல் போன்ற முறைகளை பின்பற்றுவதன் மூலம் பூச்சிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கட்டுக்குள் வைக்கலாம்

இயந்திரவியல் மாற்றுமுறை
பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது தாவரங்களையும் அவற்றின் பாகங்களை பண்ணையிலிருந்து அகற்றுதல், பூச்சிகளின் முட்டைகளையும் மற்றும் புழுக்களையும் சேகரித்து அழித்தல், விளக்குப் பொறிகளை உபயோகித்தல், ஒட்டும் வண்ண தட்டுகளை உபயோகித்தல் மற்றும் இனக்கவற்ச்சி பொறிகளை உபயோகித்தல் போன்றவை பூச்சிகளை கட்டுப்படுத்த நன்கு செயல்படும் இயந்திரவியல் மாற்று முறைகளாகும்.





உயிரியில் மாற்றுமுறைகள்
பூச்சிகளை பிடிக்கும் விலங்குகளையும், நுண்கிருமிகளையும் உபயோகிப்பதன் மூலம் பயிர்களை பூச்சித்தாக்குதலிருந்து காத்து பூச்சிகளை பொருளாதார இழப்பு ஏற்படுத்தாமல் கட்டுப்படுத்துகிறது. டிரைக்கோகிரம்மா முட்டைகள் 40000-50000/ஒரு ஹெக்டேர் நிலத்தில் மெதுவாக வெளியிடுதல், கிலோநஸ் பிளாக்பர்னி 15000-20000 /ஒரு ஹெக்டேர், அபான்டெலஸ் 15000-20000 /ஒரு ஹெக்டேர், கிரைசோபர்லா 5000 /ஒரு ஹெக்டேர் போன்றவற்றை மெதுவாக நிலத்தில் விதை விதைத்து 15 நாட்கள் கழித்து வெளியிடுமாறு செய்து விட்டு, பின்பு விதை விதைத்து 30 நாட்கள் கழித்து மற்ற ஒட்டுண்ணிகளையும், வெளியிடுதல் மூலம் இயற்கை வேளாண்மை பண்ணையில் பூச்சிகளின் தாக்கத்தினை எளிதில் கட்டுப்படுத்திடலாம்

உயிர்பூச்சிக்கொல்லிகளை உபயோகித்தல்
டிரைக்கோடெர்மா விரிடி அல்லது டி.ஹாராஷியானம் அல்லது சூடோமோனாஸ் புளூரெசன்ஸ் போன்றவற்றை தனியாகவோ அல்லது இவற்றை கலந்தோ 4 மில்லி கிராமினை ஒரு கிலோ விதையில் கலந்து உபயோகிப்பதன் மூலம் விதையின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இது தவிர பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபைலே, நியுமெரியா ரைலேயி, வெர்ட்டிசிலியம் போன்ற சந்தையில் கிடைக்கும் இதர உயிர் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகித்து ஒரு குறிப்பிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். பேசில்லஸ் துரின்ஜென்ஸ், ஸ்டீனீபிரியோனிஸ் மற்றும் பே. துரின்ஜென்ஸ் சாண்டிகோ போன்றவை வண்டு வகை பூச்சியினை நன்கு கட்டுப்படுத்தவும் மற்றும் இதர சில பூச்சிகளை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. பி.டி. எனப்படும் மேற்கூறிய பூஞ்சை டயமன்ட் கருப்பு மோத் எனப்படும் காய்கறிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 0.5-1 கிலோ என்ற அளவில் உபயோகிக்கலாம்.



தாவர பூச்சிக்கொல்லிகள்
நிறைய தாவரங்களுக்கு பூச்சிக்கொல்லி பண்புகள் உள்ளன. இத்தாவரங்களின் சாறுகள் மற்றும் இதர பண்படுத்தப்பட்ட பாகங்கள் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்திட உதவுகின்றன. இவ்வாறு உபயோகப்படும் தாவரங்களில் வேம்பு நன்கு செயல்படுகிறது.

வேம்பு
தோராயமாக வேம்பு 200 வகையான பூச்சிகள், வண்டுகள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வெட்டுக்கிளிகள், இலையினை உண்ணும் பூச்சிகள், செடிப்பூச்சிகள், அசுவனி, பச்சை தத்துப்பூச்சி, புழுக்கள் மற்றும் அந்து பூச்சி போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த வேம்பு உதவுகிறது. வேம்பின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் வண்டுகளின் புழுக்கள், பட்டாம்பூச்சி மற்றும் இதர புழுக்கள் கட்டுப்படுத்த உதவும். இலை சுருட்டுப்புழு, தத்து பூச்சிகள், இலைப்புழு, போன்றவற்றை நன்கு கட்டுப்படுத்த உதவுகின்றது. வண்டுகள், அபிட்ஸ், வெள்ளை பூச்சிகள், மாவுப்பூச்சி, வளர்ந்த பூச்சிகள், பழ வண்டுகள், சிலந்தி மைட்கள் போன்றவற்றையும் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

இதர பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
பெரும்பாலான இயற்கை விவசாயிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிறைய புதுமையாக பூச்சித்தாக்குதலை பயிர்களில் கட்டுப்படுத்தும் முறைகளை கண்டறிந்துள்ளனர். ஆனால் இந்த முறைகளில் அறிவியல் பூர்வமாக பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனினும் அவை பெரும்பாலான விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவற்றின் உபயோகத்தினை பற்றி விவசாயிகளின் பேசுவதை கேட்க முடிகிறது. விவசாயிகள் இக்கண்டுபிடிப்புகளை வெளியில் பொருட்களை வாங்காமல் அவர்கள் பண்ணையில் தயாரித்து உபயோகிக்க முயற்சிக்கலாம். பிரபலமடைந்த தயாரிப்பு முறைகளை கீழே காணலாம்.



மாட்டு சிறுநீர்
மாட்டு சிறுநீரினை தண்ணீரில் 1:20 என்ற விகிதத்தில் கலந்து இதனை பயிர்களில் தெளிப்பதன் மூலம் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும் இது செயல்படுகிறது.

நொதிக்கவைக்கப்பட்ட தயிர்
மத்திய இந்தியாவின் சில பாகங்களில் மோர் (நொதிக்கவைக்கப்பட்ட தயிரினை0 வெள்ளை ஈ, தத்து பூச்சி மற்றும் அசுவினி போன்றவற்றை கட்டுப்படுத்த உபயோகிக்கப்படுகிறது

தஸ்பர்ணி சாறு
அரைக்கப்பட்ட வேப்பிலை 5 கிலோ, நொச்சி இலைகள் 2 கிலோ, ஆடுதிண்ணா பாலை இலைகள் 2 கிலோ, பப்பாளி 2 கிலோ, டினோஸ்போரா கார்டிபோலியா இலைகள் 2 கோலோ, சீதாப்பழ மரம் இலைகள் 2 கிலோ, புங்க இலைகள் 2 கிலோ, ஆமணக்கு இலைகள் 2 கிலோ, அரளி 2 கிலோ, எருக்கு இலைகள் 2 கிலோ, பச்சை மிளகாய் அரைத்தது 2 கிலோ, பூண்டு நசுக்கியது 250 கிராம், மாட்டு சாணம் 3 கிலோ மற்றும் மாட்டு சிறுநீர் 5 லிட்டர் போன்றவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு நொதிக்கவைக்கவேண்டும். இக்கலவையினை தினமும் மூன்று முறை ஒழுங்காக கலக்கிவிடவும். நன்கு நசுக்கி பின்பு சாறு எடுக்கவும். இதனை ஆறு மாதத்திற்கு சேமித்து வைக்கலாம். இச்சாறு ஒரு ஏக்கருக்கு பாய்ச்சுவதற்கு போதுமானது.

நீம்அஸ்ட்டிரா
வேப்பிலை தண்ணீருடன் கலந்து அரைத்தது 5 கிலோ, இதனுடன் 5 லிட்டர் மாட்டு சிறுநீர், 2 கிலோ மாட்டு சாணம் போன்றவற்றை கலந்து 24 மணி நேரத்திற்கு நொதிக்கவிடவும். இந்த நொதித்தலின் போது இடையிடையில் கலக்கிவிடவும். பின்பு நன்கு பிழிந்து வடிகட்டி தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக தயாரிக்கவும். இதனை ஒரு ஏக்கர் நிலத்திற்கு தெளிக்க உபயோகிக்கலாம். உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் மாவுப்பூச்சிகளின் தாக்குதலையும் கட்டுப்படுத்த இந்த கரைசல் உதவுகிறது.

பிரம்மாஸ்டிரா
மூன்று கிலோ அரைத்த வேப்பிலையுடன் 10 லிட்டர் மாட்டு சிறுநீர் கலக்கவும். பின் 2 கிலோ அரைத்த சீதாப்பழ மர இலைகள், 2 கிலோ பப்பாளி மர இலைகள், 2 கிலோ மாதுளை இலைகள், 2 கிலோ கொய்யா மர இலைகள், போன்றவற்றை தண்ணீருடன் கலக்கவும். மேற்கூறிய இரண்டையும் கலக்கி 5 முறை இக்கரைசல் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு 24 நேரம் கழித்து வடிகட்டவும். இதனை பாட்டில்களில் 6 மாதம் வரை சேமித்துவைக்கலாம். 2-2.5 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு உபயோகிக்கலாம். இது உறிஞ்சும் பூச்சிகள், பழ ஒட்டைபோடும் பூச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கலாம்.

அக்னியாஸ்டிரா
ஒரு கிலோ அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி இலைகள், 500 கிராம் மிளகாய், 500 கிராம் பூண்டு, 5 கிலோ வேப்பிலை போன்றவற்றை 10 லிட்டர் மாட்டு சிறுநீரில் கலக்கவும். இதனை 5 முறை அதன் அளவில் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவும். பின்பு இக்கரைசலை வடிகட்டி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்து வைக்கலாம். 2-3 லிட்டர் கரைசலை தண்ணீருடன் கலந்து 100 லிட்டராக்கி ஒரு ஏக்கருக்கு உபயோகிக்கலாம். இது இலை சுருட்டுப்புழு, தண்டு, பழ ஒட்டை போடும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.





மூலம் : தேசிய இயற்கை வேளாண்மைக்கான மையம், காசியாபாத்

கியூபாவில் இயற்கை வேளாண்மை

1959ல் ஏற்பட்ட கியூபா புரட்சியிலிருந்து 1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் கூடிய வணிக உறவுகள் முறிவடையும் வரை, கியூபாவில் வேளாண்மையானது மூலதனம் அதிகமான, அதிகளவில் ஓரின பயிர் வளர்க்கும் விதமாக இருந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடையின் காரணமாக கியூபா வியாபாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், தொழிற் கருவிகள் மற்றும் வேளாண்மைக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி கொல்லி போன்ற இடு பொருட்களுக்காக சோசலீச நாடுகளை சார்ந்து இருந்தது.

1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் முறிந்தால் உணவு இறக்குமதி 50%க்கும், பூச்சிகொல்லிகள் 60%மும், உரம் 77%ம், வேளாண்மைக்குத் தேவையான பெட்ரோலிய பொருட்கள் 50% வீழ்ச்சியடைந்தன.இதனால் வேளாண் நிர்வாகம் இரண்டு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறைந்த விவசாய உள்ளீடுகளை கொண்டு இருமடங்கு வரை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி உணவு பயிர்களின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதாகியது.

இதன் விளைவாக கியூபாவில், அதிக உள்ளீடு விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு பெருமளவில் திரும்ப வேண்டயிதாயிற்று. பொதுவாக இவ்வாறு இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மட்டும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும். ஆனால், கியூபாவால் இந்த கால அவகாசத்திற்காக காத்திருக்க இயலாது. இதனால் கியூபாவின் அறிவியலறிஞர்களும், திட்டமிடுபவர்களும், புதிய வழிமுறைகளை, இயற்கை வேளாண்மையில் புகுத்தி இந்த கால அளவை குறைக்க முயன்றனர்.

கியூபா வேளாண்மையில் ஓரினப்பயிர் வளர்ப்பு முறைக்கு மாற்றாக பல்வகைப் பயிர் வளர்க்க முயன்றனர். வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும், வேதியல் பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக உயிரியல் பூச்சி கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்களுக்கு பதிலாக கால்நடைகளை கொண்டு உழுதனர். நீர் பாசனத்தை நம்பினால் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் பயிர் செய்ய முற்பட்டனர். விவசாயத்தில் உள்ளூர் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டியதால், அவர்கள் நகரங்களுக்கு வெளியேறுவது வெகுவாக குறைந்தது.

நவீன வேளாண்மையால் உற்பத்தியான அளவை அடைய, பாரம்பரிய இயற்கை வேளாண்மை மூலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதற்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும், மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பொருட்களுக்கு நுகர்வோர்களும் கூடுதல் தொகை கொடுப்பவர். இந்த கால கட்டத்தில், மண் வளம் பாதுகாக்கப் படவேண்டும்.

மற்ற நாடுகளில், நவீன வேளாண்மையின்றி, பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்பது ஏதாவது, சில பகுதிகளில் நடக்கும். ஆனால் கியூபாவில் நாடு முழுவதுமே இயற்கை வேளாண்மைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர் பாதுகாப்பிற்காக கியூபாவில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறை கடைபிடிக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த பெருமளவில் உயிரியல் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் தேவைகளுக்காக மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும், அரசு பண்ணைகளும் இவற்றை உற்பத்தி செய்தன. மேலும் மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப்படுத்த நுண்ணியிரிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. களைகளை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்பட்டது.

இயற்கை வேளாண்மை வெற்றி பெறவேண்டுமானால் மண், நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும். கியூபாவில் நிலம் உப்புத்தன்மையாக மாறுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் மண் அரிமானம், உயிரியல் பொருட்கள் குறைவது கட்டுப்படுத்தப்பட்டது. மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும், பயிர் சுழற்சி மூலம் கிடைக்கும் தாவர உரங்களை பயன்படுத்தியும், வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரிக்க உபயோகப்படுத்தினர். கியூபாவில் பயன்படுத்திய இயற்கை உரங்கள் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டது.

ஒரே நேரத்தில் விளை நிலங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் ஊடுபயிராக செய்யப்பட்டன. பாரம்பரியமாக கியூபா விவசாயிகள் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்துவருபவர்கள். எ.கா. சோளமும், பீன்சும், காபியுடன் வாழையும் பயிரிட்டனர்.

கியூபாவில் மண்வள மேம்படுத்தலில் காடு வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பானியர்கள் கியூபாவிற்கு வந்த பொழுது, கியூபாவில் 80% காடுகளாக இரந்தது. 1959 புரட்சியின் போது, அந்நாட்டில் 18% தான் காடுகள் இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிறகு, காடு வளர்ப்பிற்கும், நில அரிப்பை தடுப்பதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1970களில் சமூக மரக்கன்று, பண்ணைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதன் குறிக்கோள் என்னவெனில் விதைகளை சேகரித்து, நாற்றுகள் வளர்த்து, அவற்றை கிராமப்புறங்களில் நடுவது என்பதாகும். 1989 - 1990ல் 2,00,000 எக்டேர் நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டன. இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் காடுகளின் அளவு விரைவாக குறைந்து வருகிறது. கியூபா விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையும் அவர்களது அறிவையும், தற்பொழுதுள்ள அரசு விவசாய தொழில் கலைஞர்களின் புதிய முறைகளையும் இணைத்தது, இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதற்கான கியூபா பெரும் முயற்சி எடுததுக் கொண்டது.

லத்தீன் அமெரிக்க மக்கள் தொகையில் 2% முள்ள நாடு கியூபா, ஆனால் விஞ்ஞானிகளில் 11%மும் நல்ல ஆராய்ச்சி பின்புலமும் கொண்ட கியூபாவில் அரசு இதனை முனைப்புடன் நடத்தியது. இதற்காக 1982ல் மாற்று விவசாயம் என்பது இயக்கமாக மாறியது. இதனால் இந்நாள் வரை உபயோகிக்கப்படாத ஆராய்ச்சி முடிவுகள், உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை நடைபெற்றது. இதனால் இதன் பயனை கியூபா மக்கள் 1989 - 1990ல் பெற முடிந்தது.

பாரம்பரிய முறை விவசாயம் செய்ய அதிக ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்கு பதிலாக கால்நடையை உபயோகிக்கும் போது, மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதற்காக கிராமப்புறங்களில் வேலை செய்ய விருப்பத்துடன் வரும் நகரமக்களுக்காக, தற்காலிக தொழிலாளர் குடில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு தற்காலிகமாக வருபவர்கள் 15 நாட்கள் வேலை செய்து விட்டு தங்கள் நகரங்களுக்கு திரும்பி விடுவார்கள். 1991ல் முதல் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஹவானா நகரத்தில் 1,46,000 பேர் கிராமப்புற வேலையில் பணிபுரிந்தனர்.

இரண்டு வருடம் வேலை செய்ய ஒரு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் ஒவ்வொருநாளும் 12 மணி நேரம் வேலை செய்தனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆசிய விளையாட்டின் போது கட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம் போன்ற பெரிய வீட்டு வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வசிப்பவர்களுக்கு மருத்துவ வசதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகள் போன்ற வசதிகளும் அளிக்கப்பட்டன. இரண்டாண்டு வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.

அரசு நிலங்கள் சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொழிலாளர் பொறுப்பில் அளிக்கப்பட்டது. இதில் அதிகமான விளைச்சலை பெறும் குழுக்களுக்கு ஊக்க பரிசு அளிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் இருமடங்காகியது. தற்பொழுது வாழை மற்றும் எலுமிச்சை பயிர்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் டர்கிளோ திட்டம் எனும் முறையில், இராணுவ சேவை முடிந்தவுடன் எல்லா இளைஞர்களும் விவசாயத்தில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு கிராமப்புற சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் நகரப்புறங்களிலிருந்து வெளியேறி கிராமப் புறங்களில் தங்க வாய்ப்பு ஏற்படும்.

***********

உணவு பயிர்களுக்காக கியூபா வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று, எனவே உணவு தற்சார்புடைய 1989ல் தேசிய உணவு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி உணவுபயிர்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிக அளவில் பெருக்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. மேலும் ஹவானாவை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களை சாராமல், தற்சார்புடையதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.

நகரங்கள் உணவுப் பொருட்களுக்காக கிராமப்புறங்களை சார்ந்திருந்ததால் அதிக செலவு ஏற்பட்டது. எ.கா. கிராப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கனிகளை குளிர்பதனப்படுத்தவும், சேமித்து வைக்கவும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்திற்கும் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க நகரங்களிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மனித வளமே தேவை, பெரிய இயந்திரங்கள் தேவையில்லை.

கியூபாவின் உணவில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் குறைவாக இருப்பதால், நகரத்தில் உள்ள தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும். சிறிய தோட்டங்களில், பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், தாவர நோய்கள் மற்றும் நச்சு பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். கடைசியாக, நகர தோட்டங்களினால் உணவு பிரச்சனையை ஒரு தனிநபரே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு அரசாங்கத்தை எதிர்நோக்க தேவையில்லை.

நகர தோட்டங்கள் கியுபாவில் மூன்று வகைகளாக இருந்தன. முதல் தனியார் நிலத்தில் தனி நபர் அல்லது குடும்ப தோட்டம். இரண்டு அரசு நிலத்தில் கூட்டுறவு மூலம் பயிர்செய்வது மூன்று அரசு தோட்டங்கள். முதல் வகையான தோட்டத்தில், தனி நபர் அல்லது குடும்பம் பயிர் செய்வது அவர்களது உபயோகத்திற்கு போதுமானதாக இருக்கும். பயிர்செய்ய தேவையான இடு பொருட்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். விதைகளை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றனர். இரண்டாவது வகையான தோட்டங்கள் என்பது, பொது நிலங்களில் மக்கள் அமைப்புகள் (பெண்கள் குழு, வட்டாரக் குழுக்கள்) பயிரிட்டன. பொது நிலங்கள் உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பின் இக்குழுக்கள், என்ன பயிரிடுவது? எப்பொழுது பயிரிடுவது? என்பதை தீர்மானித்தனர். பயிர்செய்ய தேவையான இடுபொருட்களை இவர்களே தயாரித்துக் கொண்டனர். மூன்றாவது வகையான தோட்டங்கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் போன்ற நிறுவனங்களினால் பயிர் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பவர்கள் வேலை நேரம் என்ன பயிரிடுவது? போன்ற பொறுப்புகளை தீர்மானித்துக் கொண்டனர். இதிலிருந்து உற்பத்தியாகும் விளைபொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. மற்ற வகைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அவர்களது வீட்டு உபயோகத்திற்காக எடுத்து சென்றனர்.

நகரத்தில் வசிப்பவர்களுக்கு கூட வேளாண்மை பற்றிய பொது அறிவு இருந்தது. ஏனெனில் கியூபா புரட்சியின் போது வேளாண் தொழில் மற்றும் உணவு உற்பத்தியுடன், மக்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கியூபா தேசிய தலைவரான ஜோஸ் மார்ட்டியின் தத்துவப்படி, தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனவே கியூபா இளைஞர்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்களது பாடதிட்டத்தின் ஒரு அம்சமாக, கிராமப்புரங்களுக்குச் சென்று, விவசாயத்தை ஒரு பாடமாக பயின்றனர். மேலும் அநேக கியூப மக்கள் ஆண்டிற்கு இரண்டு வாரம் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாய வேலையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு இருமுறை தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டன.காகித தட்டுப்பாடு நிலவுவதால், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் அது பலரை சென்றடைய உதவிகரமாக இருந்தது.

இவ்வாறு மிகப்பெரிய அளவில் கியூபாவில் இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும். கியூப அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தினால் மனித வளமும் அதிகரித்து, அறிவியல் பூர்வமான விவசாயம் செய்யும் அறிவும் அதிகரித்ததால் மாற்று விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கீழ் சமூகத்தில் திறம்பட ஒருங்கிணைந்து செயல்பட்டதால், குறைவான வளங்களை கொண்டு அதிக அளவு உணவு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் வெளியிலிருந்து உணவு இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.

இயற்கை விவசாயம் செய்யும் பொழுது, விவசாயி அல்லது தோட்டத்தை நிர்வகிப்பவர், நிலத்துடனான உறவு நெருக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மண்ணின் ஒவ்வொரு தரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. எங்கு நில அமைப்பு மோசமாக உள்ளது, எப்பக்கத்திலிருந்து நச்சு பூச்சிகள் நுழையும், எங்கு எறும்பு புற்றுகள் உள்ளன என்பன போன்றவற்றை தெரிந்து இருக்க வேண்டும். சோசலிச பிளாக்குடன் கொண்டிருந்த வணிக உறவு முறிவுற்ற நிலையில், கியுப மக்கள் அதிக தொல்லைகளுக்கும், உணவு பற்றாக்குறைக்கும் ஆளாயினர். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு மாறியதன் மூலம் அவர்கள் இந்த சவாலை சமாளித்தனர். இத்தகைய மாற்றுவிவசாயம் அவர்களது முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகின் மற்ற பகுதிகளில் இயற்கை விவசாயம் கொள்கை அளவில் உள்ளது. இந்த இருபது ஆண்களில் இயற்கை விவசாயத்தில் கியூபா மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை பிரமிக்கும் படி உள்ளது. விவசாய பண்ணைகளில் விவசாயிகளின் குழந்தைகள் நச்சுத்தன்மையான பூச்சிகொல்லிகளுக்கும், வேதியல் உரங்களுக்கும் இடையில் உலாவிய நிலைமாறி இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.

பிடல்காஸ்ட்ரோயின் உழைப்பு (வியர்வை) மற்றும் அறிவின்மூலம் அற்புதம் நிகழ்த்துவோம் என்ற சூளுரைக்கேற்ப அவர்கள் உழைப்பது வரவேற்கத்தக்கது. அவர்களது செயல்பாடுகள் அவர்களது நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கு மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையால் வாடும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

மானிட சரித்திரத்தில், நவீன நச்சு, பசுமை புரட்சி வேளாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் கீழ்மக்களின் வெற்றி, தோல்விகளிலிருந்து படிப்பினை மேற்கொண்டு, நாமும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்புவோம். இதன்மூலம் புதிய பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம்.

சனி, 26 ஜூன், 2010

உணவில் கலக்கும் விஷம்!

பள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம்.
சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம்.
உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.
உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை . இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.
வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
டின்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.
கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.
கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!
வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர், மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.
பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:
330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும் Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு. 924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.
407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.
Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.
கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.
குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 & E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth, 124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G, 129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine, இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 & E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown, Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.
120 &
E120 Carmines, Cochineal, 142 & E142 Acid Brilliant Green, Green S,, 160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts 143 Fast Green போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.
150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.
 பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம். Butylated Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.
சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.
Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும் சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.
Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.
Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம், மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.
Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.
Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.
Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.
Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.
Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.
Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.
Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.
Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.
Yellow 6: கேக்குகள், மிட்டாய்கல், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.
அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் "INGREDIENTS"அல்லது "காங்டைன்ஸ்" என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா? என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.
பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது. ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.
சர்க்கரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம் உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.
ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.